Oct 26, 2010

Sophie Schooll-2005 புரட்சிப்பெண்

**************************சோஃபி ஸ்கால் ஒரிஜினல் புகைப்படம்****************
சோஃபி ஸ்கால்.... இப்படத்தின் டிவிடி கவரை படிக்கும்போது ஒரே ஒரு அம்சம் உடனே என்னை பார்க்க தூண்டியது.சிறந்த வெளிநாட்டுப்படம் என்ற ஆஸ்கார் அவார்டு கொடுக்கப்படவில்லை .நாமினி என்ற அந்தஸ்து மட்டும் அளித்துள்ளனர்.[நல்ல படத்துக்கு பெரும்பாலும் ஆஸ்கார் அவார்டு கொடுக்க மாட்டார்கள்]இந்த ஒரு தகுதி போதாதா......உடனே படத்தை பார்த்து விட்டேன்.இப்படத்தின் இயக்குனர் Martin Langer

21 வயது புரட்சிப்பெண் சோஃபி ஸ்கால்.நாஜிக்கும்பலை எதிர்த்து உருவான இயக்கம் ஒயிட் ரோஸ்.கத்தியின்றி ரத்தமின்றி அகிம்சை வழியில் போராடும் இயக்கம்.இந்த இயக்கத்தில் தனது சகோதரன் ஹன்ஸ் ஸ்காலுடன் இணைந்து போராடுகிறாள் சோஃபி. நாஜிக்கும்பலைக்கண்டித்து ஒரு நோட்டிஸ் ஒன்றை தயாரித்து மியூனிச் யூனிவர்சிட்டி வளாகத்தில் பரப்புகின்றனர் இருவரும்..நாஜிகும்பல் கைது செய்து விசாரிக்கின்றனர்.முதலில் குற்றத்தை மறுத்த சோஃபி ஆதாரங்களை அள்ளி வீச ஒத்துக்கொள்கிறாள்.விசாரணை அதிகாரி சரியான விடாக்கண்டன்.மொத்த இயக்கத்தையும் காட்டிக்கொடுக்கும்படி வலை விரிக்கிறான்.சிக்காத இந்த சிங்கக்குட்டி சாதிக்கிறாள் தானும் தமையனும் மட்டுமே பொறுப்பு என்று உறுதி காட்டுகிறாள் இந்த ஜெர்மன் நாட்டு வேலு நாச்சியார்.குற்றத்தை உறுதி செய்து கோர்ட்டுக்கு அனுப்புகிறான் அதிகாரி.


ஹிட்லரின் அடிவருடிகளே ஜட்ஜ்...அரசு வக்கீல்...குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆஜராகும் வக்கீல் கூட...எப்படி நீதி கிடைக்கும்??????


மரண தண்டனை பரிசாக கிடைக்கிறது .


வழக்கமாக தீர்ப்பு வழங்கப்பட்டு 99 நாள் கழித்துதான் தண்டனை நிறைவேற்றப்படும்.இந்த புரட்சி வீரர்களை அன்றேக்கொல்ல பேயாட்சி..... சாத்திரம் விதிக்கிறது.இறுதியாக தன் பெற்றோரை சந்திக்கிறாள் இந்த வீரமங்கை.இந்த ஒரு காட்சி போதும் உலகில் உள்ள அத்தனை அவார்டுகளையும் அள்ளிக்கொடுக்க......


இந்த காட்சியை விவரிக்க என் தமிழ் தாயே.....தமிழில் உள்ள அத்தனை வார்த்தைகளையும் எனக்கு வழங்கு.....


பெருமையில் கன்னம் பூரிக்க...பெருமித்தில் நெஞ்சு விடைக்க...கண்கள் மட்டும் கண்ணீரில் மிதக்க.. மகளை வாரியணைக்கும் பெற்றோர்....சிங்கங்களைப்பெற்ற சிங்கங்கள் அல்லவா!!!!!!!!!

கொலைக்களத்தில் கில்லட்டில் தலை கொடுக்க வீர நடை போட்டு செல்லும் போதும் சொல்கிறாள் ஒரு சொல்.. “வானத்தில் இன்னும் சூரியன் பிரகாசமாக இருக்கிறான்”

இந்த நல்ல உயிர்களை பறிக்க நாஜி எடுத்துக்கொண்ட நாட்கள் நான்கே நான்கு நாட்கள்.நோட்டிஸ் வீசப்பட்ட நாள்..... 1943 பிப்ரவரி 18.....உயிரைப்பறித்த நாள் 1943 பிப்ரவரி 22.....
புரட்சி வீரர்களின் கல்லறையின் ஒரிஜினல் புகைப்படம் முன்னால் நின்று சொல்வோம்....

வீரவணக்கம்....வீரவணக்கம்...சோஃபி ஸ்காலுக்கு வீரவணக்கம்.

Oct 23, 2010

Katyn-2007 மரணக்காடு



ஊசியிலைக்காடு கேள்விப்பட்டு இருப்பீர்கள்.மரணக்காடு???????????
Katyn என்ற இடத்தில் 22,000 பேர்களை விதைத்து ராணுவத்தினர் உருவாக்கியது.

ஒரு பெண்ணை ஏககாலத்தில் இரண்டு பேர் கற்பழித்தால்......இதே நிலைதான் இரண்டாம் உலகப்போரில் போலந்து பெற்றது.ஒருபுறம் ஜெர்மனி..மறுபுறம் சோவியத் ரஸ்யா.
இருநாடுகளுக்கிடையே சிக்கி சீரழிந்ததை படம் பிடித்து காட்டியிருக்கிறார் அந்திரே வாஜ்டா.

1940ல் அன்னா காத்திருக்கிறாள் சோவியத் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட கணவனுக்காக.....

அன்னாவின் மாமியாரும் காத்திருக்கிறார் ஜெர்மன் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட கணவனுக்காக.....
காத்திருத்தல்தான் உண்மையான மரணதண்டனை என்கிறார் அ.முத்துலிங்கம் 'அங்கே இப்ப என்ன நேரம்?' நூலில்...[தமிழினி வெளியிடு]
ஜெர்மானியர்கள் தங்களது ஆக்கிரமிப்பு பகுதிகளில் இப்படுகொலைகளை நிகழ்த்தியது சோவியத்துதான் என்று ஆவணப்படத்தை காட்டி பிரச்சாரம் செய்கிறது.சோவியத்தும் ஒரு ஆவணப்படத்தைக்காட்டி பிரச்சாரம் செய்கிறது.

உண்மையை.... அன்னாவின் கணவனது ரத்ததில் குளித்த டைரி..... படம் பிடித்து காட்டுகிறது.
இப்படுகொலையின் அலறலை....சிதிலத்தை.....ஆவணப்படித்தியிருக்கிறது Pawel Edelman ஒளிப்பதிவு....பக்கபலமாக Krzysztof Pendereeki பின்னணி இசை.இறந்தவர்களின் இறுதிக்கதறல் இசையில் கலந்திருப்பதை இதயம் உள்ளவர்கள் மட்டுமே உணரமுடியும்.அந்த கதறலில் இயக்குனர் வாஜ்டாவின் தந்தையின் குரலும் கலந்து இருப்பதை நாம் தெரிந்து கொண்டால் சோகம் நேரடியாக....அதிரடியாக.... தாக்கும்.இதனால்தான் இவரது பெரும்பான்மை படங்களில் போரின் பேரழிவே மையக்கருவாக இருக்கும்.
படத்தினூடே வரும் குட்டிக்காதல் சிறுகதை அவலச்சுவையை அகப்படுத்துகிறது.
இப்படத்தை பார்த்துவிட்டு இடும் சிறப்பான பின்னூட்டத்திற்க்கு வாஜ்டாவின் டிரையாலஜி படங்களான
A Generation
Kanal
Ashes and Diamonds
டிவிடி பரிசாக குரியரில் அனுப்பி வைக்கிறேன்.
படம் பார்க்காதவர்களுக்கு கலைமாமணி ஜெயசித்ரா இயக்கத்தில் உருவான உலக்கசினிமா “நானே என்னுள் இல்லை”படத்தின் டிக்கெட் சிறப்பு பரிசாக வழங்கப்படும்.

Oct 20, 2010

Not one less-டீச்சரம்மா


ஜாங் யீமூ வர்த்தக சினிமாவின் மாபெரும் இயக்குனர்.பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட் உருவாக்குவதே இவரது வேலை.உ.ம் ஹீரோ[ஜெட்லீ]அதே சமயத்தில் ரியலிஸ்டிக் பாணியில் பயணம் செய்து அவார்டுகளையும் வசூலையும் வாரிக்குவிப்பது உப வேலை.நியோ ரியலிஸ்டிக் பாணியில் எடுக்கப்பட்ட படம் நாட் ஒண் லெஸ்.அனைத்து நடிகர்களுமே தொழில் முறை நடிகர்கள் அல்ல.அனைவருமே கிராமத்து விதைகள்.அவர்களது ஒரிஜினல் பெயர்களே படத்திலும் பயன்படுத்தப்பட்டது.
1990களில் பயணிக்கிறது கதை.அழகிய மலைக்கிராமம்....ஓராசிரியர் பள்ளி....ஆசிரியர் ஒரு மாதவிடுமுறையில் செல்லநினைக்கிறார்.


13 வயது வீ மின்சி தற்காலிக டீச்சராக நியமிக்கிறார்.ஓரே ஒரு நிபந்தனை “பள்ளியில் ஒரு மாணவன் குறையக்கூடாது”.வீ மின்சி ஒரு வளர்ந்த குழந்தை .பள்ளி மாணவர்களை விட இவளது அறிவு கம்மி.ஒரு வழியாக வகுப்பை ஒப்பேற்றிக்கொண்டு இருக்கிறாள்.சுட்டி மாணவன் ஒருவன் தப்பி அருகில் உள்ள நகரத்துக்கு வேலைக்காக செல்கிறான்.நகரத்துக்குச்சென்று அவனை மீட்பதே கிளைமாக்ஸ்.

எல்லா காட்சிகளிலுமே நகைச்சுவை நியாயமாக இருக்கிறது.ஆனாலும் ஒரு சோகத்தை ஒளித்து வைத்திருக்கிறது.மாணவர்களும் டீச்சரும் கோக் குடிக்கும் காட்சி...பானைச்சோற்றில் ஒரு பதம்.ஆளுக்கு ஒரு சொட்டுதான் கிடைக்கிறது.ஆனாலும் நீண்ட நாள் ஆசை நிறைவேறிய திருப்தி அந்த முகங்களில்.. கிராமங்கள் மீது ஊடகமும் கார்ப்பரேட் கம்பனிகளும் இணைந்து தொடுக்கும் வன்முறை.... இக்காட்சி நம் முகத்தில் அறைந்து சொல்கிறது.

இயற்க்கை ஒளி மட்டும் பயன்படுத்தி காட்சிகளை ஒவியமாக்கியவர் Hou Yong .பெரும்பான்மை காட்சிகளில் ஒளிந்து கொண்டு தேவைப்படும்போது மட்டும் வெளிவந்து இசையால் நம்மை கட்டிப்போடுகிறார் சீனத்து இளையராஜா Sam Bao
உலகசினிமாவில் ஜாங் யீமூ முத்திரை பதித்த மற்ற படங்கள்
The Road Home
Raise the Red Lantern
To Live
Riding alone for thousend miles
இந்தப்படங்களையும் பார்த்துவிட்டு வாருங்கள்...எனது அகில உலக
ஜாங் யீமூ ரசிக மன்றத்தில் உறுப்பினராக சேர்த்து கொள்கிறேன்.தலைவர் பதவி கோவையில் ராஜா என்பவர் பறித்துக்கொண்டு போய்விட்டார்.

Oct 14, 2010

உதிரிப்பூக்கள்-தமிழில் உலகசினிமா



உதிரிப்பூக்கள் தமிழில் நான் பார்த்த முதல் உலகசினிமா.தமிழில் வந்த முதல் உலகசினிமா பாதை தெரியுது பார்.இயக்கியவர் இந்தியாவின் முதல் உலகசினிமாவான சின்னமோளை உருவாக்கிய நிமாய்கோஸ்.தயாரித்தவர்கள் கம்யூனிஸ்ட் இயக்க தோழர்கள்.இப்படம் ஓடினால் தங்கள் தொழில் நாறி விடும் என்று கருதிய ஏ.வி.எம் போன்ற மசாலா நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து படத்தை வாங்கி பிட் படங்கள் ஓடும் நாலாந்தர தியேட்டர்களில் ரீலிஸ் செய்து மக்களைச்சென்றடையாமல் பார்த்துக்கொண்டனர்.எம்.பி.சீனிவாசன் இனிய இசையில் வெளியான பாடல்கள் மட்டும் இன்றும் நம் செவிக்கு உணவளித்துக்கொண்டிருக்கிறது.




தென்னங்கீற்றின் ஊஞ்சலிலே.....




......................................................................




.............................................................................




சிட்டுக்குருவி பாடுது தன் பெட்டை துணை தேடுது......





சின்னசின்ன மூக்குத்தியாம் சிவப்புக்கல்லு மூக்குத்தியாம்......





உதிரிப்பூக்களை உருவாக்கிய மகேந்திரன் உருவானது முள்ளும் மலரும் படத்தில்தான்.தங்கப்பதக்கம் போன்ற மசாலா படங்களுக்கு கதை வசனம் எழுதி புகழ் பெற்றிருந்த மகேந்திரனுக்கு கதையே கேட்க்காமல் வாய்ப்பளித்தார் ஆனந்தி பிலிம்ஸ் வேணுச்செட்டியார்.ஆனால் படத்தை பாதியில் நிறுத்தச்சொல்லிவிட்டார்.காரணம் கேட்டதற்க்கு,”ரஜினி கை,காலை ஆட்டி நடித்தால்தான் ரசிப்பார்கள்....நீ ரஜினிக்கு கை இல்லாமல் படமெடுக்குறீயாமே..என் காசை கரியாக்கவா..போ வீட்டுக்கு”என்றார். கமல் கேள்விப்பட்டு சமரசம் செய்தார்.படம் நட்டமானால் நான் அடுத்த படத்துக்கு கால்ஸீட் தருகிறேன் என்று உறுதியளித்தார் கமல்.ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் பெண்டிங்...இனி பைசா தரமுடியாது எனச்செட்டியார் முரண்டு பிடிக்க இப்போதும் கை கொடுத்தது கமல்.அந்தப்பாடல் படமாக்க கைக்காசை கொடுத்தார் கமல்.அந்தப்பாடல் ..செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்......





இவ்வளவு உதவி செய்த கமலும்...உதவி பெற்ற மகேந்திரனும் ஏன் இணைந்து ஒரு படம் கூட தரவில்லை????????




ஒரு கம்ப்யூட்டரில் இரண்டு மவுஸ் வேலை செய்யமுடியாது.





முள்ளும் மலரும் மகத்தான வெற்றிபெற்றதில் அப்படத்தின் ஒளிப்பவாளர் பாலுமகேந்திராவின் பங்கு அதிகம் என்று மீடியாவும்,சினிமா இண்டஸ்ட்ரியும் சேர்ந்து கதைத்தன.எனவேதான் அசோக்குமாரோடு கை கோர்த்தார்.இவர்களது கூட்டணியில் வந்த வெற்றி படைப்புகள்




நெஞ்சத்தை கிள்ளாதே,உதிரிப்பூக்கள்,மெட்டி.




தமிழ்சினிமா உலகசினிமா பாதையில் கூட்டிச்சென்ற டிரண்ட்செட்டர் மகேந்திரன்.அந்தப்பாதை அடைத்து மசாலா பாதையில் திருப்பிவிட்டது ஏவி.எம்.என்னின் முரட்டுக்காளையும்,சகலகலாவல்லவனும்.





மகேந்திரனின் மாஸ்டர்பீஸ் உதிரிப்பூக்கள்.இன்றளவும் இப்படத்தின் தரம் இமயம்.




மனைவியின் தங்கை அழகிய நங்கை....அவளை தாரமாக்க துடிக்கிறான் நாயகன்.இவனது ஆசைக்கு எண்ணெய் வார்க்கும் சுயநலமிகளால், பலியாகிறான்.இவனது குழந்தைகள் உதிரிப்பூக்களாகின்றன.




விஜயன்,அஸ்விணி,சாருஹாசன்,சரத்பாபு என அனைவருமே யதார்த்தப்பிரதிகள்.




இளையராஜா இசையில் மோனாலிசப்பாணி கடைப்பிடித்திருப்பார்..... அழகிய கண்ணே பாடலில்..ஒரு தாயின் சந்தோசமும்,மனைவியின் துக்கமும் சரிவிகிதக்கலவையாக ஒலிக்கும்.பின்னணி இசையாக அநேககாட்சிகளில் மவுனத்தை இசையாக வழியவிட்டிருப்பார்.




படத்தின் டைட்டிலில் கதை புதுமைப்பித்தன் என்று வரும்.கதை படித்துவிட்டு படம் பார்ப்பவர்களுக்கு ஒரு உண்மை புரியும்.மகேந்திரன் மகத்துவம் தெரியும்.
இப்படத்தின் பாக்ஸாபிஸ் வெற்றி எல்லா பொய்களையும் கலைத்துவிட்டது.ஈரான் நாட்டு பிலிம் இன்ஸ்ட்யூட்டில் இப்படம் பாடம்.இந்திய அரசும் இப்படத்தை பெருமைக்குறிய சொத்தாக வாங்கி பெருமை சேர்த்துக்கொண்டது.

Oct 9, 2010

The purple Rose of cairo-நடிகனின் சுயரூபம்







சீரியசான உலக சினிமா மத்தியல்... இப்படம் ஒரு ஜாலி திருவிழா.ஆனால் திருவிழாவில் பலி கொடுப்பது உண்டே...இங்கு பலியாடு சினிமா ஹீரோக்கள்.

ஹாலிவுட்டில் இருந்துகொண்டு ஹீரோக்களை இப்படி காயடித்த ஆண்மகன் வுடி ஆலன்...எழுதி இயக்கி இருக்கிறார்.

1930 ல் துவங்குகிறது படம்.அமெரிக்கா எத்தியோப்பியாவாக இருந்த காலம்.

கதாநாயகி சிசிலியா, அன்றாடம் அடி வாங்குகின்ற அடித்தட்டு மக்களில் ஒருத்தி.அவளின் தினசரி ஒரே சந்தோசம் சினிமா.ஒரே படத்தை தினசரி பார்ப்பாள்.ஒரு நாள் அவள் தினசரி பார்க்கும் சினிமா ஹீரோ,திரையில்
இருந்து நேரடியாக சிசிலியாவிடம் பேச ஆரம்பிக்கின்றான்.அது மட்டுமல்ல.. திரையில் இருந்து குதித்து சிசிலியாவின் சீட்டுக்கு அருகில் வந்து உரையாட ஆரம்பிக்கின்றான்..திரையில் இருக்கும் மற்ற காரக்டர்கள் திகைக்கின்றன.....சிசிலியாவும் திகைக்கிறாள்.... மற்ற ஆடியன்சும் திகைக்கிறார்கள்.....ஏன் படம் பார்க்கும் நாமும் திகைக்கிறோம்.இப்படி இருக்கவேண்டும் திரைக்கதை.நம் திரைக்கதாசிரியர்கள் வுடிஆலன் மூத்திரத்தை குடிக்கவேண்டும்..


இதற்க்கு பிறகு படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் நீங்கள் பார்த்து அனுபவிக்கவேண்டியது .ஒரே ஒரு காட்சி மட்டும் சொல்லிவிடுகிறேன்....ப்ளீஸ்.....சினிமா ஹீரோவாக நடித்த....நடிகன் ...அவனும் களத்தில் குதிக்கிறான்..இவனது அறிமுக காட்சியிலேயே நடிகர்களது முகத்திரைகளை கிழிக்கிறார் வுடிஆலன்.'இப்படி உன் பட காரக்டர் ஊருக்குள் புகுந்து கலாட்டா செய்கிறதே' ...என்று கேட்டால் அலட்சியமாக தலை குலுக்குவான்.லாயர் போன் பண்ணி,'அடே பாவி அந்த காரக்டர் ஏதாவது கொலை ,கொள்ளை,கற்ப்பளிப்பு..... இப்படி எது செய்தாலும் மவனே நீதான் ஜெயிலுக்கு போகவேண்டும்' என்று எச்சரித்த பிறகு பதறி ஓடுவான் சிசிலியாவையும்,தனது காரக்டரையும் சந்திக்க.
இந்த இடத்தில்..... நமது ஊர் ஹீரோ மகள் திருமணம்.... ரசிகர்கள் வரக்கூடாது எச்சரிக்கை....சார் சமீபத்தில் நம்ம படம் ரீலிசாகணும்-மந்திராலோசனை ....ஊருக்கு ஊர் விருந்து பல்டி அறிக்கை.... ஞாபகம் வந்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல..

சினிமா நடிகன் நிஜம் வேறு...நிழல் வேறு என்பதை சிசிலியாவுக்கும் நமக்கும் தெளிய வைக்கிறார் இயக்குனர்... கிளைமாக்ஸில்.....

வசூலில் மட்டுமல்ல விருதுகளையும் வாரி குவித்தது இப்படம்.

Oct 5, 2010

The Boy in the striped pyjamas-மரணம் தரும் ரணம்





John Boyne நாவலை படமாக்கியவர் Mark Homan.




ஆனநதவிகடனில் எஸ்.ராமகிருஸ்ணன் அற்புதமாக அறிமுகம் செய்து இருந்தார் இப்படத்தை.




படித்தவர்கள் விலகி வேறு பிளாக் போய்விடுங்கள்.மற்றவர்கள் பின் தொடருங்கள்.




ஹிட்லர் யூதர்களை கொன்று குவித்த வதை படலம்தான் கதைக்களம்.இந்த கொலைக்களம் பற்றி அறியாமல் இந்த ஊருக்கு வருகிறான் ப்ரூணோ என்கிற ஜெர்மானியச்சிறுவன் பெற்றோரோடு, கூடவே சகோதரியும்...




தந்தை ஹிட்லரின் ராணுவ அதிகாரி..




தூரத்தில் இருக்கும் பேக்டரியின் உயரமான சிம்னியில் இருந்து வரும் கரும் புகையில் யூதர்களின் ஆவி கலந்திருப்பதை அறிந்ததும் துடிக்கிறாள் ப்ரூனோவின் தாய்...ரசிக்கிறார்கள் தந்தையும் சகோதரியும்...இது எதுவும் அறியாத ப்ரூனோ யூதக்கேம்பில் வசிக்கும் ஸ்மியூல் என்ற யூதச்சிறுவனோடு இருக்கிறான் நட்ப்போடு..அந்த நட்ப்பின் ஆழம் அவனை மரணத்துக்கு கூட்டி செல்கிறது.ஆயிரம் யூதர்கள் கொல்லப்படுவதை ரசித்த ப்ரூனோவின் தந்தை, தன் மகனை மரணப்படுகுழியிலிருந்து மீட்க துடிக்கும் தவிப்புதான் கிளைமாக்ஸ்..




டிவி,செய்திதாள்களில் வரும் மரணச்செய்திகள் எதுவுமே நம்மை பாதிப்பது இல்லை...உற்றார்...உறவினர் அச்செய்திகளில் இல்லாதவரை....




1995ல் திரு.நாகேஸ் அவர்களை தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிக்காக ஒப்பந்தம் செய்யச்சந்தித்தேன்.வெளிநாடு செல்வதாகக்கூறி மறுத்தார்.சூழ்நிலை புரியாமல் வற்ப்புறுத்தினேன்.செய்தித்தாளை தூக்கிப்போட்டு ,இந்தச்செய்தியில் நீயோ..உன் சொந்தக்காரங்களோ இருந்திருந்தால் இங்கு வந்திருக்கமாட்டாய் என கோபித்தார்.செய்தித்தாளை காலையிலேயே படித்து விட்டுத்தான் சென்றிருந்தேன்.




செய்தி...பெட்ரோல் டேங்கர் லாரி மீது மணமகள் குடும்பத்தார் சென்ற வண்டி மோதி அனைவருமே மரணம்...மணமகளை தவிர...




இச்செய்தியின் பாதிப்பில் நாகேஸிருந்தார்..நான் இல்லை..




வெளிநாடெல்லாம் அவர் செல்லவேயில்லை என்பதை பிற்பாடு தெரிந்து கொண்டேன்..




இப்படம் பார்த்த பிறகு புரிந்து கொண்டேன்... நாகேஸ் ப்ரூனோவின் தாய் கேரக்டர்.....




நான்....????????????????