Jan 31, 2013

எம்ஜியாருக்கு நடந்தது கமலுக்கும்...






நண்பர்களே...
கமலுக்கு ஏற்பட்ட கதியை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
இன்றைய தலைமுறையினர் அறிந்திராத பழைய வரலாறை நினைவு கூர்ந்து சொல்கிறேன்.


எம்.ஜி.யார் உலகம் சுற்றும் வாலிபன் என்றொரு படத்தை வெளிநாடுகளில் படமாக்கி இயக்கி தயாரித்தார்.
அவர் திமுகவிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டு அதிமுகவை தொடங்கிய காலம்.
அப்போது மிருக பலத்துடன் இருந்த கருணாநிதியின் திமுக அரசு,
 உலகம் சுற்றும் வாலிபனை வெளியிட பல இடைஞ்சல்கள் கொடுத்தது.
படத்தின் நெகட்டிவை கொளுத்தவே சதி செய்யப்பட்டது.
எல்லா சதிகளையும் எம்ஜியார் முறியடித்து படத்தை வெளியிட்டார்.
படம் வெளி வரப்போகிறது என்ற போஸ்டரை தமிழ்நாடெங்கும் கிழித்து வீசப்பட்டது.
எம்ஜியார் சூளுரைத்தார்.
“ விளம்பரமேயில்லாமல் என் படத்தை வெற்றியடையச்செய்வேன்”
ஒரு விளம்பரம் கூட இல்லாமல் படம் 250 நாடகளுக்கு மேல் ஓடியது வரலாற்றுச்சாதனை.

அதைத்தொடர்ந்து வந்த அனைத்து இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் அனைத்திலும் வெற்றி வாகை சூடினார்.
அவர் உயிரோடு இருக்கும் வரை திமுகவினருக்கு அஞ்ஞாத வாசம்தான்.

பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் ராட்சஷ பலத்தோடு மத்தியில் ஆட்சி செய்த போது அவரது தேவைக்காக நாடெங்கும் அவசர நிலையைப்பிரகடனப்படுத்தி மிசா சட்டத்தை அமல் படுத்தினார்.
அப்போது ‘கிஸா குர்சிகா’ என்ற படத்தை  நெகட்டிவையே கொளுத்தி
அட்டூழியம் செய்தது காங்கிரஸ் மத்திய அரசு.
தொடர்ந்து வந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுத்தார்கள்.
இந்திரா காந்தியையே தோற்கடித்து,
காங்கிரஸ்ஸையும் நாடெங்கும் குழி தோண்டி புதைத்தார்கள்.


விஸ்வரூபமும் தடை செய்யப்பட்டுள்ளது.
மற்றவற்றை நீங்களே எழுதிக்கொள்ளுங்கள்.



Jan 30, 2013

விஸ்வரூபம் இன்றே வெளியீடு.


நண்பர்களே...
நீதி தேவதை கலைஞானிக்கு கை கொடுத்துள்ளாள்.
இந்த வெற்றி...ரசனைக்கு கிடைத்த வெற்றி.
இணையத்திற்கு கிடைத்த வெற்றி.

பதிவுலகம்,பேஸ்புக்,ட்வீட் என இணைய ஊடகம் பெரும்பான்மையாக கமலுக்கு ஆதரவு தெரிவித்தது.
இது ஒட்டு மொத்தமாக மக்கள் மனநிலையை பிரதிபலித்தது.
அதுவே விஸ்வரூபத்திற்கு விரைவான நீதி வழங்க வைத்தது.

அமீர் படமான ஆதி பகவனுக்கும் வேண்டுமென்றே குடைச்சல் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த ஆபத்தான போக்கை முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.
சென்சாரான எந்தப்படத்தையும்... கட்டபஞ்சாயத்து அமைப்புகளுக்கு இனி போட்டு காட்டவே கூடாது.

தமிழக முதல்வரும் விஸ்வரூப தீர்ப்பில் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
இல்லையேல் மக்கள் திருத்தி தீர்ப்பெழுதுவார்கள்.

நீதி கிடைக்க போராடிய அனைவருக்கும் நன்றி.

இன்றே வெளியாகும் விஸ்வரூபத்திற்கு...
இமாலய வெற்றி கிடைக்க வாழ்த்துங்கள்...
தியேட்டரில் பாருங்கள்.
பரவசத்தை உணருங்கள்.

விஸ்வரூபம் வெளியாகும் கோவை,திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட தியேட்டர் லிஸ்ட்...


நெல்லை,தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட தியேட்டர் லிஸ்ட்...


சென்னை தியேட்டர் லிஸ்ட்...


அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Jan 29, 2013

விஸ்வரூபம் பார்க்கும் வழி...


நண்பர்களே...
விஸ்வரூபம் தமிழகத்தின் மாபெரும் இரு அரசியல் சக்திகளின் சதுரங்க விளையாட்டில் சிக்கி தவிக்கிறது.
தடை செய்யப்போராடும் அமைப்புகள் பகடைக்காய்களே!.

25 சதவீத இஸ்லாமிய மக்கள் வசிக்கும் கேரளாவில் விஸ்வரூபம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
எனவே தமிழக - கேரள எல்லைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில்,
விஸ்வரூபம் வெளியாகி உள்ள தியேட்டர்களில் சென்று பார்ப்பதே சாலச்சிறந்தது.

சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெருவாரியாக ‘வேலந்தாவளம்’ என்ற கேரள சிற்றூரில் உள்ள
தனலஷ்மி தியேட்டரில் பார்த்து வருகிறார்கள்.

வேலந்தாவளம் செல்லும் வழி இதோ...

பஸ்ஸில் வருபவர்கள் கோவை வந்து,
உக்கடம் பஸ் நிலையம் வாருங்கள்.
ஒரு மணி நேரத்துக்கு... ஒரு பஸ்.
வேலந்தாவளம்  செல்லும் டவுண் பஸ் தயார்.
தனலஷ்மி தியேட்டர்காரர் காலை 10 மணியிலிருந்து நள்ளிரவு 3 மணி வரை தொடர்ச்சியாக ஆறு காட்சிகள் நடத்துகிறார்.
இது வரை அனைத்து காட்சிகளும் ’ஜெ’ புண்ணியத்தில் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மற்ற மாவட்டத்திலிருந்து கார் மற்றும் வேன்களில் வருபவர்கள்
‘நிலாம்பூர் பை பாஸ் ரோட்டில்' போய் கோவை-பாலக்காடு சாலையை அடையுங்கள்.
சாவடி என்ற ஊரைத்தொட்டதும் இடது பக்கம் வேலந்தாவளம் செல்லும் சாலை இருக்கும்.
அச்சாலை விஸ்வரூபத்திற்கு தொடர்ந்து வரும் இடையூறை ஞாபகப்படுத்தும்.
குண்டும் குழியும் விதவிதமாக வந்து கொண்டே இருக்கும்.

இடையூறுகளை தாண்டி பயணிக்கும் போது தமிழக எல்லை
செக்போஸ்ட் வரும்.
எப்போது பார்த்தாலும் ஒரு தொப்பை போலிஸ் செல் போனில் பேசிக்கொண்டிருப்பார்.
அவரைத்தாண்டியதும் ஒரு சிறிய பாலம் வரும்.
பாலத்தின் முடிவில் கள்ளுக்கடை போர்டு உங்களை வரவேற்கும்.
கள்ளுக்கடை போகாமல் நேரே போனால சாலையின் வலது பக்கத்தில் தனலஷ்மி காத்திருப்பாள்.

போகும் வண்டியை சாலையின் ஓரத்தில் பார்க் செய்து விட்டு டிக்கெட் வாங்க கியூவில் நின்று விடுங்கள்.
ஒரு ஆளுக்கு இரண்டு டிக்கெட் மட்டுமே கொடுக்கப்படும்.
எனவே அனைவருமே கியூவில் நின்று வாங்குவது உத்தமம்.
ஒரே கட்டணம்தான்...100 ரூபாய்.

கோவை மக்கள் குனியமுத்தூர், மதுக்கரை வழியாகப்போய் நிலாம்பூர் பைபாஸ் இணையும் இடத்தை அடையலாம்.

நான் விஸ்வரூபம் இரண்டாம் முறை பார்க்க,
எனது டிவிஎஸ் ஸ்கூட்டியிலேயே ஜாலியாக சென்றேன்.

மீண்டும் சொல்கிறேன்.
விஸ்வரூபம் முழுக்க முழுக்க ANTI-அமெரிக்கன் படமே.
ANTI-இஸ்லாம் படம் அல்ல.
குரானை அனு தினமும் ஓதும் இந்திய முஸ்லீமிற்கும்...
குரானை அனு தினமும் ஓதும் ஆப்கானிஸ்தான் முஸ்லீமிற்கும்...
உள்ள முரண்பாடே, விஸ்வரூபத்தின் கதையாக இயங்குகிறது.


கமல் சொன்ன மாதிரி இப்படத்தை விளங்க உலக ஞானம் தேவை.
படத்தில் ஆப்கானிஸ்தான் இஸ்லாமியரைக்கூட இழிவு படுத்தவில்லை.
மாறாக அவர்களை தூக்கிப்பிடித்திருக்கிறார் படைப்பாளி கமல்.
அமெரிக்க தீவிரவாதத்துக்கு பதிலடியாகத்தான் ஆப்கானியர் தீவிரவாத்ததில் இறங்குவதை தெள்ளத்தெளிவாக படத்தில் காட்டப்படுகிறது.
அது கூட ஆப்கானியர்கள் செய்யும் எதிர்வினை...
மிகக்குறைவான சேதாரமே விளைவிக்கிறது.
உதாரணமாக விஸ்வரூபத்தில் வரும் ஒரு காட்சி...
அமெரிக்கர்களின் ஆணைக்கேற்ப செயல்படும்‘நேட்டோ’ ராணுவம்...
ஆப்கானிய கிராமத்தை சுக்கு நூறாக்கியதால் பெண்கள்,குழந்தைகள் உட்பட அனைவருமே பலியாகிறார்கள்.

அமெரிக்க தீவிரவாதத்துக்கு பதிலடியாக ஆப்கானியர்கள் ஒரு இளைஞனை மனித வெடிகுண்டாக்கி ஒரு ராணுவ வண்டியை சிதறடிக்கிறார்கள்.
மக்கள் சீனாவை கட்டமைத்த மாமேதை  ‘மாவோ’ சொன்னதை நினைவில் கொள்க...
“ நாம் என்ன ஆயுதம் எடுக்கிறோம் என்பதை நம் எதிரிகள்தான் தீர்மானிக்கின்றனர் ”. 




படம் பார்க்கும் அனைவரிடமும் இக்கேள்வி எழும்...எழ வேண்டும்.
ஒரு கிராமமும்...ஒரு ராணுவ வண்டியும் ஒன்றா ?

ஆப்கானிஸ்தானை  தொடர்ந்து உலக நாடுகள் காயடித்ததை ஒரு மூதாட்டியின் வசனத்தில் பொதிந்திருக்கிறார் கமல்.
“ முதல்ல பிரிட்டிஷ்காரன் வந்தான்...
அப்புறம் ரஷ்யாக்காரன்...
அப்புறம் தாலிபன்...
இப்ப நீ வந்திருக்க...”
என ஆப்கான் மூதாட்டி, கதாநாயகனான இந்திய முஸ்லீமை பார்த்து கேட்பதாக காட்சியமைத்திருக்கிறார் கமல்.
இதுதான் படத்தின் சென்டர் பாய்ண்டே.

இன்னும் சொல்லத்துடிக்கிறேன்...
படம் பார்க்காத உங்களிடம் மேலும் படத்தை சொல்லுவது கூட தீவிரவாதம்தான்.

விஸ்வரூபம் வெளியாக அவரவர் கடவுள்களை...
பிரார்த்திப்போம்...
தொழுவோம்...
வணங்குவோம்.

கோவை வலைப்பதிவர்கள் சங்கத்தின் துவக்க விழாவும்
பதிவர்கள் கோவை நேரம் ஜீவானந்தம், அகிலா, கோவை எம்.சரளா ஆகியோரது புத்தக வெளியீட்டு விழாவும் ஒருங்கே நடை பெற உள்ளது.
இணையத்தில் உலவும் தமிழ்ச்சிங்கங்களை அன்போடு அழைக்கிறோம்.
நிகழ்ச்சி முழு விபரம் இதோ...


இந்நிகழ்ச்சியை யாராவது தடை செய்ய தமிழக முதல்வரிடம் போட்டுக்கொடுத்து,
எங்களையும் விளம்பரப்படுத்தவும்.
பப்ளிக்குட்டி பண்ண சங்கத்தில் நிதி இல்லை.
ப்ளீஸ்...

Jan 26, 2013

VISWAROOPAM \ 2013 \ விஸ்வரூபத்திற்காக விமானத்தில் பறந்தேன்.


நண்பர்களே...
விஸ்வரூபத்தை சென்னையில் ஆரோ3டியில் பார்க்க ஆசைப்பட்டது தப்பாகி விட்டது.
படம் தடை செய்யப்பட்டு விட்டதால் தவித்தேன்.
அண்டை மாநிலத்தில் பெங்களூரில் பார்த்து விடலாம் என நினைத்தால் அங்கும் தடையென செய்தி வந்தது.
கேரளாவில் படம் வெற்றிகரமாக வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது என்ற செய்தியை நண்பர் விஜய் சொல்லி உயிரூட்டினார்.

செய்தி கேட்டதும் துள்ளி குதித்து சென்னை விமான நிலையத்தில்
‘ஸ்டாப் பிளாக்கில்’ பிரத்யட்சமானேன்.
ஜெட் ஏர்வேய்ஸ்,ஸ்பைஸ் ஜெட்,ஏர் இந்தியா, இண்டிகோ எல்லாமே ஹவுஸ்புல்.
முற்றிலும் மனம் தளர்ந்த விக்கிரமனாய் என்னுடைய டிராவல் ஏஜெண்டை தொடர்பு கொண்டேன்.
மாலை 7.15 மணிக்கு ஸ்பைஸ் ஜெட்டில் ஆன்லைன் மூலமாக இடம் பிடித்து கொடுத்தார்.
சரியான நேரத்திற்கு பிளைட் புறப்பட்டு 8.15 லேண்டாகியது.
நண்பர் விஜய்  ‘போலோ’காரில் பிக்கப்பண்ணி பறந்தார்.
தமிழ்நாடு பார்டர் தாண்டி வேலந்தாவளம் என்ற சிற்றூரில் தனலட்சுமி என்ற தியேட்டரை 9.45 மணிக்கு அடைந்தோம்.
படம் ஸ்டார்ட் ஆகி, டைட்டிலில் எழுதி இயக்கியவர் ’கமல்ஹாசன்’ என்ற பெயர் ஒளிரும் போது...
எழுந்த தியேட்டர் ஆரவார வெடித்தருணத்தில் நுழைந்தோம்.

படம் பற்றி விமர்சனம் பிறகு எழுதுகிறேன்.
பாராட்டத்தக்க அம்சங்களில் முக்கியமான சிலவற்றை சொல்லுகிறேன்.

[ 1 ] நான் ஏற்கெனவே சொன்னது போன்று,
விஸ்வரூபத்தில்  இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு பிரேம் கூட இல்லை.
மாறாக இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக படம் இயங்குகிறது.
படத்தை தடை செய்ய வேண்டும் என்று நியாயப்படி அமெரிக்கர்கள்தான் போராட வேண்டும்.
ஒரு சில இஸ்லாமியர்கள் இயக்கும் போராட்டத்தில்...
ஒரு சதவீதம் கூட நியாயம் இல்லை.

[2 ]  முதன் முறையாக ஒரு இந்தியப்படம் ‘தீமெட்டிக் ஆக்‌ஷன் திரில்லர்’ இலக்கணப்படி எடுக்கப்பட்டுள்ளது.
தீமெட்டிக் ஆக்‌ஷன் திரில்லர் படத்துக்கு சிறந்த ஹாலிவுட் உதாரணம் ஸ்டான்லி குப்ரிக் இயக்கத்தில் வெளி வந்த ‘ஃபுல் மெட்டல் ஜாக்கெட்’.

பெரும்பாலும் ஹாலிவுட் படங்களில் ஆக்‌ஷன் திரில்லர் மட்டுமே எடுக்கப்படும்.
அமெரிக்காவை தூக்கி பிடிக்கும் விதமாக,
ராணுவமோ, தனி மனிதனோ அல்லது ஒரு குழுவோ இயங்கி
‘அமெரிக்கா வென்றது அல்லது காப்பாற்றியது’ என்ற
சுப முடிவு திரைக்கதைப்போக்கு இருக்கும்.
எதிர் தரப்பை கணக்கிலெடுக்காத ஒரு தலைப்பட்சம் அப்பட்டமாக இருக்கும்.
உ.ம் :  ராணுவம் = Saving Private Ryan,
தனி மனிதன் = Rambo, மற்றும் அனைத்து ஜேம்ஸ் பாண்ட் படங்கள்.
குழு = Act Of Valor.

[ 3 ] ஆயிரக்கணக்கான ஹாலிவுட் படங்களை பார்த்த ரசிகர்களையே மிரட்டி விட்டார் கமல்.
‘மேக்கிங் கிங்’ என மீண்டும் நிரூபித்து உள்ளார்.

[ 4 ] படத்தில் ஒரு சண்டைக்காட்சி வருகிறது.
ஹாலிவுட்டை விட ஒரு படி மேலே போய் விட்டார்.
கனல் கதகளியாட்டம் அந்த சண்டை.
தீவார் படத்தில் அமிதாப் பச்சன் போடும் பைட்தான் இந்திய சினிமாவின் உச்சம்.
இன்றிலிருந்து விஸ்வரூபமே முதலிடம்.

[ 5 ] வில்லன் தப்பித்துப்போகும் ஹாலிவுட் கிளைமாக்ஸ் இருக்கிறது.
எனவே இரண்டாம் பாகம் நிச்சயம்.

[ 6 ]  தொழில் நுட்பத்தில், 900 கோடியில் உருவாகும் ஹாலிவுட் நேர்த்தியை... 90 கோடி பட்ஜெட்டில் கொடுத்ததே கமலின் இமாலய சாதனை.

[ 7 ] கதக் வாத்தியாராக கமல் காட்டும் நளினத்திற்காகவே படத்தை பத்து முறை பார்க்கலாம்.

[ 8 ]  படத்தில் கிஸ்ஸடிக்க வாய்ப்பிருந்தும்...
‘கிஸ்’கிந்தா காண்டம் இல்லாமல் இரண்டு குஜ்லிகளை வைத்து வேறொரு வகையில் தன் ரசிகர்களுக்கு தீனி போட்டது புதுமையே.

உலகில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பெருமைப்படும் வகையில் எடுக்கப்பட்ட காட்சிகளில் ஒரு சோற்றை பதம் பார்ப்போம்.
உயிர் போகும் பேராபத்து வரும் போது நாம் இஷ்ட தெய்வத்தை துதிப்போம்.
விஸ்வரூபம் படத்தில் கதாநாயக பாத்திரம் ஏற்றிருக்கும் கமல்ஹாசன் அல்லாவை தொழுகிறார்.
இந்த ஒரு காட்சி போதும் கமல்ஹாசன்  என்ற படைப்பாளியின் நேர்மைக்கு.
அராஜகமாக அடம் பிடித்து போராடாதீர்கள் போராட்டவாதிகளே.
தமிழகத்தில் படம் வெளியாக குரல் கொடுப்பவர்களே உண்மையான இஸ்லாமியர்கள்.
படத்தை எதிர்ப்பவர்களை நரகத்தில் தள்ளி தண்டிப்பார் அல்லா.

படம் முடிந்து வெளியே வரும் போது நள்ளிரவுக்காட்சிக்காக திரண்டிருந்த கூட்டம் படத்தைப்போலவே பிரம்மாண்டம்.


Jan 25, 2013

கமலுக்கு ரஜினியின் ஆதரவு...



நண்பர்களே...
கிட்டத்தட்ட இந்தியா முழுமைக்கும் விஸ்வரூபம் தடை செய்யப்பட்டு விட்டது.

கமலின் ஆருயிர் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நண்பனுக்கு இடுக்கண் வரும் போது உதவும் நண்பனாய் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
அவருக்கு என் நன்றி.



கமலுக்கு ஆதரவு தெரிவித்த இஸ்லாமிய அன்பர்களுக்கு...
மீலாது நபி வாழ்த்துக்கள்.
நீங்கள்தான் மெஜாரிட்டியாக இருப்பீர்கள் என நானும்...
கமல் போலவே நம்புகிறேன்.

தடை உத்தரவு பெற்ற குறுகிய கால சாதனையாளர்களுக்கு,
எம்ஜியார் பாட்டை பரிசளிக்கிறேன்.
காணொளி காண்க...


பெங்களூரில் விஸ்வரூபம் ரீலிசா?


நண்பர்களே...
பெங்களூரில் விஸ்வரூபம் வெளியாகிறதா ?
அன்பர்கள் தயவு செய்து தெரிவிக்கவும்.
என்னுடைய மொபைல் எண் 09003917667.
அன்புடன்,
உலகசினிமா ரசிகன்.

Jan 24, 2013

புறாவை வறுத்தா தின்பீர்கள் !


நண்பர்களே...
அதிர்ச்சியில் இருக்கிறேன்.
காலையிலிருந்து வரும் செல்போன் அழைப்புகள் என்னை கொதி நிலையில் வைத்திருக்கிறது.

விஸ்வரூபம் மலேசியாவில் வெளியாகி விட்டது.
மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு.
மலேசிய  சென்சாரில், ஒரு திரைப்படத்தில் இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்கள் இருக்கிறதா என பார்ப்பதற்கு என்றே இஸ்லாமியப்பண்டிதர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் அனுமதி வழங்கிய பிறகு மறுமடியும் வேறு பிரிவிற்கு அனுப்புவார்கள்.
அந்தப்பிரிவில்  தமிழ் படத்துக்கு, தமிழறிஞர்கள் படம் பார்த்து சான்றிதழ் தர வேண்டும்.
இதையெல்லாம் கடந்து விஸ்வரூபம் வெளியாகி உள்ளது.

[ நான் மலேசியாவில் தயாரித்த விளம்பரப்பட அனுபவத்தில் இச்செய்தியை கூறி உள்ளேன்.]

மலேசியாவில் படம் வெளியாகி...விமர்சனமும் வந்து விட்டது.
இதோ விமர்சனம்...
Vishwaroopam gets magnum opus response in malaysia (Here are some response the film received from malaysian viewers 

"Dhool opening. 
Kamal appears and whistle clap fills the hall 
A treat is in store
Openinh song wow"

"Stark realities behind terrorist breeding places.
Have never seen anything like this before.
Not a single irrelevant scene. Lesson on direction for everyone.
Lots of subtle humor"

"What a transformation.
Need many watches. Once isn't enough.
Some parts we feel sympathy for the terrorists"

"Phew..... what a roller coaster ride.....!
All of us are insatiated ... we want more. Please bring on part 2 quickly.
My children thought it was intermission when the movie ended!
2.5 hours of non stop action.
This is what I want from kamal.
Movie of the decade for sure.
Guys in India. .. it is worth the wait"

Courtesy:
http://www.twitlonger.com/show/kq8l74



இன்றைய விஸ்வரூப விளம்பரத்தை ‘குறியீடாக’ வெளியிட்டுள்ளார்.



இவ்விளம்பரத்தை பார்த்து எனது நண்பர் அடித்த கமெண்ட்...

“புறாவை வறுத்தாடா தின்பீர்கள்...
வறுமைக்கு பிறந்தவர்களே...”

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டதற்கு கமலின் விளக்க அறிக்கையை
 காண்க...


உயர் நீதி மன்றமும் படத்தை 28 வரை வெளியிடத்தடை விதித்துள்ளது.
26 ம்தேதி நீதிபதி படம் பார்க்க இருக்கிறார்.
விஸ்வரூபம் தமிழ்நாட்டில் மட்டும் இனி பார்ப்பது நீதியின் கரங்களில்.

படத்தை பார்க்க மலேசியா போகலாமா என சிந்தித்து வருகிறேன்.
28 தீர்ப்பு வரும் வரை காத்திருக்க பொறுமையில்லை.
மலேசியாவில் மிட்வேலி மல்டிபிளக்ஸில் வெளியாயிருக்கிறதா ?
மலேசிய அன்பர்கள் தெரிவிக்கவும்.


Jan 23, 2013

இரக்கமுள்ள இஸ்லாமியர்களே சிந்தியுங்கள்...


நண்பர்களே...
ஒரு கலைஞன் நல்ல படத்தைக்கொடுக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டும்
என்பதற்கு சமீபத்திய உதாரணம் விஸ்வரூபம்.
படம் வெளியாக இன்னும் இரண்டு தினங்களே உள்ளன.
ஆனால் கமல் மீது அமில மழை பொழிய ஆரம்பித்து விட்டார்கள் சிலர்.
படமே இன்னும் வெளியாகவில்லை.
டிரைலரைப்பார்த்து கதையெழுதி கருத்துச்சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
ஒருவர் கமலை இந்து மதத்தீவிரவாதி என முத்திரையே குத்தி விட்டார்.
கறிக்கடைபாயை... கந்தஹார் தீவிரவாதி என்பது போல.

சமீபத்தில் கமல், புதிய தலைமுறை டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த முக்கியமான கருத்துரை ஒன்றை வேண்டுமென்றே தவிர்த்தேன்.
காரணம்,அந்தக்கருத்துரையை,  ஊதி பெருக்கி இந்துத்துவா சக்திகள் விஸ்வரூபமெடுத்து கமலை சின்னாபின்னமாக்க எத்தனிப்பார்கள்.

அக்கருத்தை இந்த நாட்டில் கமல் அளவுக்கு
தார்மீக கோபத்துடன் உக்கிரமாக  எந்த சினிமாக்கலைஞனும் சொன்னதில்லை.
சொல்லவும் மாட்டர்கள்  தொடை நடுங்கிகள்.
நான் கூட அப்போது நினைத்தேன்...
 “எதற்கு தேவையில்லாமல் இன்னொரு வினையை தானே வலியத்தேடுகிறார்!” என்று...

படத்தை வெளியிட மாட்டோம்...என கொக்கரிக்கிறது ஒரு அமைப்பு.
குட்டையை குழப்பி மீன் பிடிக்கும் கலையை கற்று சில அமைப்புகள் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
இரக்கமுள்ள இஸ்லாமிய நல்லோர்கள், நடு நிலையாளர்கள் இந்தச்சதிக்கு பலியாக மாட்டார்கள்.
இருந்தாலும், உங்கள் மவுனம் அவர்களுக்கான ஆதரவாக்கப்படும்.
இணைய இஸ்லாமியர்கள்...
வலைப்பதிவு,பேஸ்புக்,ட்வீட்டர் போன்ற இணைய ஊடகத்தில் கருத்து தெரிவிக்கலாமே !

உறுதியாகச்சொல்கிறேன்
இந்திய முஸ்லீம்களுக்கு எதிராக படத்தில் ஒரு பிரேம் கூட இருக்காது.
இஸ்லாமியர்களின் கூடப்பிறக்காத சகோதரனாக...சிந்தையிலும் செயலிலும்  இன்று வரை வாழ்ந்து வருகிறார்.
அவரது பெயரிம் மட்டுமல்ல... உள்ளத்திலும் இஸ்லாமிய நட்புணர்வு
இன்றும்... என்றும்... வாழும்.
தயவு செய்து இனியும்,கமலஹாசன் என்ற கலைஞனை காயப்படுத்த வேண்டாம்.


விஸ்வரூபம் வெளியாக இன்னும் இரண்டு தினங்களே உள்ளன.
வில்லங்கங்களும் இரண்டு மடங்காக பெருகி வருகிறது.
தமிழ் மக்களின் ஆதரவு ஆயிரம் மடங்காக பெருகட்டும் என வாழ்த்துகிறேன்.

Jan 22, 2013

2013 கோயம்புத்தூர் விழாவில் சிவாஜி கணேசன்.


நண்பர்களே...
கோவையில் வருடாவருடம் கோயம்புத்தூர் விழா ரகசியமாக நடத்தப்படுவதால் பாமர மக்களுக்கு அது பற்றி தெரியாது.
இந்த வருடமும் அதே வழமை மாறாமல் ‘சிறப்புடன்’ நடந்து வருகிறது.
விழாவை நடத்துபவர்கள் ‘கோவை பற்றிய சினிமாவுக்காக’
எங்கள் கோணங்கள் பிலிம் சொசைட்டியை வலை வீசி பிடித்து விடுவார்கள்.
நாங்களும் கூடி கும்மியடுத்து இறுதியில் ‘குத்து பட்டு’ வருவோம்.

‘முதல் கோவை விழாவிலே’ மலைக்கள்ளன் திரையிட்ட போது
கோணங்கள் தளபதிகளுக்கு தனித்தனியாக ஆப்படித்து அனுப்பினார்கள்.
ஆப்படித்த காயம் ஆறி விட்டபடியால் மீண்டும் கோணங்கள்...
கோயம்புத்தூர் விழாக்குழுவினரோடு இணைந்து   கோவை பக்ஷிராஜா ஸ்டூடியோ தயாரித்த ‘மரகதம்’ என்ற திரைப்படத்தை திரையிடுகிறது.


மரகதம் - 1959 ல் பக்ஷிராஜா ஸ்டூடியோ தயாரிப்பில் வெளி வந்தது.
பக்ஷிராஜா ஸ்டூடியோவை கோவையில் நிறுவி பல வெற்றிப்படங்களை
பலவேறு மொழிகளில் தயாரித்து இயக்கியுள்ளார் ஸ்ரீராமுலு நாயுடு.

இவரைப்பற்றியும் பக்ஷிராஜா ஸ்டூடியோ பற்றியும் விரிவாகத்தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட பதிவுக்கு செல்லவும்.
கூடு என்ற பதிவில் பி.ஜி.எஸ். மணியன் மிக அற்புதமாக செய்திகளை சேகரித்து தகவல் களஞ்சியமாக தந்துள்ளார்.
பி.ஜி.எஸ் பதிவைக்காண்க.

மரகதம் அல்லது கருங்குயில் குன்றத்து கொலை என்று இப்படத்திற்கு இரண்டு பெயர்கள்.
அந்தக்காலத்தில் பல படங்கள்...  இரண்டு பெயர்கள் வைத்து  வெளியாகி இருக்கிறது.

மரகதம் திரைப்படத்திற்கு திரு.ராண்டார் கை எழுதிய கட்டுரை இந்து பத்திரிக்கையில் வெளியாகி உள்ளது.
ராண்டார் கை கட்டுரையை படிக்க...




மரகதம் \ 1959 \ தமிழ் \ இயக்கம் : ஸ்ரீராமுலு நாயுடு
நடிகர்கள் : சிவாஜி கணேசன், வீணை எஸ். பாலச்சந்தர், சந்திரபாபு, சந்தியா, பத்மினி, டி.எஸ்.பாலையா
இசை : எம்.எஸ்.சுப்பையா நாயுடு.
வசனம் : முரசொலி மாறன்.
 
திரையிடல் நாள் : 23-01-2013 புதன் கிழமை,
நேரம் : மாலை 5.30 மணிக்கு,
இடம் : CLL HALL [ Second Floor ],
OPP-CARMEL GARDENS SCHOOL,
SUNGAM,
OFF. TRICHY ROAD,
COIMBATORE.

மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்க :
திரு.பொன் சந்திரன்,
அமைப்பாளர்,
கோணங்கள் பிலிம் சொசைட்டி,
கோவை.
94430 39630.


கோவை வாசிகள் மரகதம் படத்தை கண்டு களிக்க இது ஒரு தங்க வாய்ப்பு.
டிவிடி,இணையம் போன்ற வசதிகளில் மரகதத்தை பார்க்க முடியும். இருந்தாலும் இது போன்று விழாக்களில் படத்தை பார்ப்பது தனியனுபவம்.
கடந்த விழாவில் ‘மலைக்கள்ளன்’ திரையிட்ட போது எம்.ஜியார். திரையில் தோன்றியதும் எழுந்த விசில் ஒலியும்,கை தட்டல்களும்
இன்னும் என் காதுகளில் எதிரொலிக்கின்றன.

சந்திர பாபு ரசிகர்கள் கவனத்திற்கு...
சந்திரபாபுவின் சூப்பர் ஹிட்டான
குங்குமப்பூவே...கொஞ்சும் புறாவே... என்ற பாடல்
மரகதம் படத்தில்தான் இடம் பெற்றுள்ளது.


விஸ்வரூபம் வெளி வர இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது.
படபடப்பு மும்மடங்காகி விட்டது.

நாளை சந்திப்போம்.

Jan 21, 2013

கமல் பயப்படுகிறார்.


நண்பர்களே...
கமலின் விஸ்வரூபத்தை தரிசிக்க,
25ம் தேதி சென்னை மாயாஜால் ஸ்கீரின் 12க்கு போகிறேன்.
எனக்காக ஆன் லைனில் ரிசர்வ் செய்து மெனக்கெட்ட நண்பர்
தமிழ்க்குறிஞ்சி இணையப்பத்திரிக்கை ஆசிரியர் செந்தில் ராஜ் அவர்களுக்கு நன்றி.
[ரெயில்வே தட்கால் புக்கிங் போல, ஐ.டி கார்டெல்லாம் கேட்கிறார்கள்.]


கமல், மணிரத்னம், பாலா ஆகியோரது படங்கள் முதல் நாள் பார்ப்பது
எனது வழக்கம்.
ஆரோ 3டி அனுபவத்திற்காக 500 கிலோ மீட்டர் பயணித்து பார்க்கவிருப்பது புதிய அனுபவம்.
கல்லூரியில் படிக்கும் போது மூன்றாம் பிறையை,
50 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணித்து பார்த்த கமல் ரசிகன்
உயிர்த்தெழுந்து விட்டதை உணர்கிறேன்.

நேற்று புதிய தலைமுறை டிவியில் கமலின் பேட்டி ஒளிபரப்பாகியது.
அதன் முக்கிய அம்சங்கள்...



விஸ்வரூபம் அமெரிக்காவில் முதன் முறையாக ஒரு தமிழ்ப்படம்
முன்பு எப்போதும் இருந்திராத அளவில் அதிக தியேட்டரில் வெளியாகிறது.
வெளியாகும் அன்றே டி.டி.எச்சிலும் வெளியாகிறது.

விஸ்வரூபத்தை வெளியிடதடைக்கற்களாக வட இந்திய வியாபாரிகள்தான் அதிகமாக குடைச்சல் கொடுத்திருக்கிறார்கள்...
கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்...
கொடுப்பார்கள்....ஜனவரி 25 வரை.

தமிழ் நாட்டில் கிடைக்கும் வெற்றியின் விஸ்வரூபம் வடக்கர்களை
கமலின் கால் ஷூவை நக்க வைத்து விடும்.

தெற்கை தேய்ப்பதில் தேர்ந்தவர்கள் வடக்கர்கள்.
வடக்கை வாழ வைத்து  வலியனுபவிப்பவர்கள் நம்மவர்கள்...
அன்றும்... இன்றும்.
என்றும் இந்த பாச்சா பலிக்காது என விஸ்வரூபம் வரலாறு படைக்கும்.

*******************************************************************************
வட இந்திய வியாபாரிகள் தமிழர்கள் தலையெடுப்பதை என்றுமே விரும்ப மாட்டார்கள்.
எனவே தமிழர்கள் தலையை எடுத்து விடுவார்கள்.
ஹிந்திக்கு போய் முண்டமானவர்கள் அநேகம்.



எம்.ஜி.யார், சிவாஜி போன்ற ஜாம்பவான்களை வைத்து பல வெள்ளிவிழாப்படங்களை கொடுத்த சரவணா பிக்ஸர்ஸ் ஜி.என்.வேலுமணியை நடுத்தெருவில் நிறுத்தியவர்கள் வட இந்திய வியாபாரிகள்.

தேவர் பிலிம்ஸ், விஜயா வாஹினி புரடக்‌ஷன்ஸ், ஜெமினி பிக்சர்ஸ்,
இயக்குனர் ஸ்ரீதரின் சித்ராலயா, ஏவி.எம், என ஜாம்பவன்களே
வட இந்திய வியாபாரிகளால் அடிபட்டு மிதிபட்ட வரலாறு அநேகம்.

இந்த விஷயத்தில், கபூர்கள், கான்கள், பச்சன்கள் அனைவருமே
கூட்டணி வைத்து கும்கியாவார்கள்.

தொழில் நுட்பக்கலைஞர்களை வேறு வழியில்லாமல் ஒத்துக்கொள்வார்கள்.
 உ.ம் : ஏ.ஆர். ரஹ்மான், ரவி.கே.சந்திரன், வி. மணிகண்டன் இத்யாதிகள்....

அவர்கள் கோலோச்ச விடுவது நம்மூர் நடிகைகளை மட்டும்தான்.
வைஜயந்திமாலா,ஹேமமாலினி, ஸ்ரீதேவி, ஜெயப்ரதா, அசின் என பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது.

*********************************************************************************
இனி கமலின் பேட்டியிலிருந்து முக்கிய சில துளிகள்...

பேட்டியாளர் : சக நடிகர்கள் உங்களுக்கு உதவ வரவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா ?

கமல் : இல்லை.
அவர்கள் மதிலில் பூனையாக இருந்தது சரியென்றே படுகிறது.

தேனை எடுக்க மரத்தில் ஏறியது நான்.
கூட்டில் கை வைத்ததும் தேனீக்கள் கொட்ட ஆரம்பித்து விட்டது.
வலிகளை நான் வாங்கிக்கொண்டு இனி அவர்கள் சவுகரியமாக தேனெடுக்க வகை செய்து விட்டேன். 

பேட்டியாளர் : டி.டிஎச் வியாபாரத்தில் ஏன் விட்டுக்கொடுத்தீர்கள் ?

கமல் : அவர்கள்  எனக்கு 500 தியேட்டர்கள் தர முன் வரும் போது 
நான் டி.டி.எச்சை ஒளிபரப்பை ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்தேன்.
டி.டி.எச்சை விட்டு விடவில்லை.
டி.டி.எச் ஒளிபரப்பை கை விட்டால்தான், அது எனக்கு தோல்வி.

பேட்டியாளர் : சமுதாய சிந்தனையை தொடர்ந்து தங்கள் படங்களில் வலியுறுத்தி வரும் நீங்கள்  ‘டெல்லி சம்பவத்தை’ எப்படிப்பார்க்கிறீர்கள் ?

கமல் : இரண்டு பெண் பிள்ளைகளை பெற்றதால் வந்த பயத்தில்தான்  ‘மகாநதி’ எடுத்தேன்.
இன்றும் எனக்கு பயம் இருக்கிறது.
பெண்களை மதிக்க, ஒரே நாளில்...ஒரே படத்தில் வந்து விடாது.
தேவர் மகனில் சொன்னதைப்போல அந்த மாற்றம் மெல்லத்தான் வரும்.
எனது பாட்டி விதவையாகும் போது மொட்டையடிக்கப்பட்டார்.
ஒரு விதவை இந்தியப்பிரதமராக இருக்கும் போதுதான் இந்த அவலம் நடந்தது.
என் பாட்டி தனக்கு நடந்த கொடுமையை  கேள்வியே கேட்காமல் ஏற்றுக்கொண்டு இறக்கும்வரை அப்படியே வாழ்ந்தார்.

இன்று இந்தியப்பெண்களுக்கு இருக்கும் குறைந்த பட்ச சுதந்திரம் முழுமையாக கிடைக்க இன்னும் காலங்களாகும்.
ஆனால் கிடைத்தே தீரும். 

பேட்டியாளர் : விஸ்வரூபத்திற்கு தொடர்ந்து வரும் பிரச்சனைகள் பற்றி...

கமல் : விஸ்வரூபம்  இஸ்லாமியர்களுக்கு எதிரானது என ஒரு வாதம் வைக்கப்பட்டது.
ஒரு முட்டாள் ஒரு படமெடுத்து இணையத்தில் விட்டபோது, இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்ட வலியும் வேதனையும் கோபமும் எனக்கும் ஏற்பட்டது.
இந்தியாவில் இஸ்லாமியர்கள் சிறு பான்மையினராக இருக்கலாம்.
உலகளாவிய வகையில் அவர்கள் பெரும் பான்மையினர்.
விஸ்வரூபம் உலகளாவிய படம்.
அவர்களுகெதிராக எனது படம் எப்படி இருக்க முடியும் ?.

பேட்டியாளர் : டி.டி.எச் முயற்சி தொடருமா ?

கமல் : நிச்சயமாக...நான் ஒருவன் மட்டுமே பயணித்தால் அது பாதையாகாது.
வழியை கை காட்டி விட்டேன்.
இனி சவுகரியமாக எல்லோரும் பயணிப்பார்கள்.
விஸ்வரூபம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது என நான் உறுதியாக நம்புகிறேன்.
அதை நீங்கள் நம்பும் போதுதான்  வெற்றி.



விஸ்வரூபப்பதிவுகள் தொடரும்.

Jan 20, 2013

மதுரையில இருக்கு...கோவையில் இல்லை.


நண்பர்களே...
விஸ்வரூபம் அட்வான்ஸ் புக்கிங் சென்னையில் துவங்கி விட்டது என
பேஸ்புக் செய்திகள் வந்து விட்டது.
வழக்கம் போல கோவை மவுனம் காக்கிறது.


தமிழ் சினிமாவுக்கு முதன் முதலாக டால்பி ஸ்டீரீயோ சவுண்டை குருதிப்புனலில் அறிமுகப்படுத்தினார் கமல்.
விருமாண்டி படத்துக்கு ஒரே ஒரு பிரிண்ட் மட்டும் ‘ டி.எச்.எக்ஸ் சவுண்ட்’ சர்ட்டிபை பண்ணப்பட்ட பிரிண்ட் போட்டார்.
ஏனென்றால் தமிழ் நாட்டில் டி.எச்.எக்ஸ் சவுண்ட் சர்ட்டிபைடு தியேட்டர் ஒன்றே ஒன்றுதான் இருந்தது.
அது சென்னையில் உள்ள சத்யம் தியேட்டர்.
[T.H.X SOUND SYSTEM =  ஸ்டார் வார்ஸ் என்னும் பிரம்மாண்ட ஹாலிவுட் படத்தை எடுத்த ஜார்ஜ் லூகாஸ்ஸின் கம்பெனி.]

ஆரோ 3 டி சவுண்ட் செய்யப்பட்ட தியேட்டர்கள் பற்றிய தகவலை கமல் தனது பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார்.


லிஸ்டை பார்த்ததும் ஏமாற்றமாக இருந்தது.
கோவையில் ஒரு தியேட்டர் கூட இந்த லிஸ்டில் இல்லை.
ஒரு வேளை, எல்லா தியேட்டர்காரனுங்களும் ,
கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்காரர்களிடம் அட்வான்ஸ் வாங்கிட்டானுங்களா !
[ கோவையில் பழைய தியேட்டர்களை,
கண்ணன் டிபர்ட்மெண்ட் ஸ்டோர் அதிபர்கள் விலைக்கு வாங்கி
மளிகை கடையாக்கி வருகிறார்கள்.]

மதுரைக்காரங்க கொடுத்து வச்சவங்க...
இரண்டு தியேட்டரில் ஆரோ 3டி சவுண்ட் வசதி செய்யப்பட்டுள்ளது.
புண்ணியவான்களூக்கு  ‘ சொக்கநாத மீனாட்சி’ அள்ளி அள்ளி கொடுக்கணும்.
விஸ்வரூபம் படமே அவர்களுக்கு கொட்டி கொடுக்கும்.
சேதி கேட்டு, கோயம்புத்தூர் வியாபாரிகளுக்கு மூலத்திலிருந்து மூளை வரை தீப்பிடிக்கணும்.

நான் சென்னையில் 25ம்தேதியே விஸ்வரூபம் பார்க்கவிருக்கிறேன்.
26ம் தேதி மதுரையில் பார்க்கவிருக்கிறேன்.
மதுரை அலப்பறையில்... படம் பாக்க ஜோரா இருக்கும்.
அவிய்ங்க கொண்டாட்டமே...ஜிகர்தண்டாதான்.
வரேன் மதுரைக்கு.
வண்டி கட்டி வாரேன்.
வரலாமா...

ஆரோ 3டி சவுண்ட் தொழில் நுட்பத்தில் உருவான,
உலகிலேயே இரண்டாவது திரைப்படமான  விஸ்வரூபத்தை பார்க்கவும்....காது குளிர கேட்கவும்  உதவிய 
 ‘கலா பூர்வ  முதலாளிகளை’ பாராட்டி வாழ்த்துகிறேன்.

Jan 19, 2013

விஸ்வரூபமே கமலின் விஸிட்டிங் கார்டு !


நண்பர்களே...
விஸ்வரூப எதிர்ப்பலைகள் தணிந்து விட்டது.
25ம் தேதி வெளியாவதில் இனி பிரச்சினை இருக்காது என நம்புவோம்.
அவர் நம்பாத கடவுளிடம் அவருக்காக வேண்டுவோம்.

வியாபார சதுரங்கத்தில்,கமலே தொடர்ந்து ஜெயித்து வந்தார்.
ஆனால், நடுவில் விழுவது போல் விழுந்தார் எதிரிகள் சுகம் காண.


தியேட்டர் அதிபர்களிடம் இறுதிப்பேச்சு வார்த்தை நடந்த இடம்...
 கமலின் அலுவலகம்.
இந்த பிரச்சனையில் கமல் தரப்பு  ஸ்டாராங்காக இருந்ததற்கு அடையாளம்...
இது ஒன்று போதும்.

கமல்,
திறமையான நடிகர்...
திறமையான இயக்குனர்...
திறமையான படைப்பாளி...
ஆனால் இவை எல்லாவற்றையும் விட...
திறமையான வியாபாரி.

இது நிறைய பேருக்கு தெரியாது.
அவருடன் கூட பயணிப்பவர்கள் மட்டுமே அறிந்த ரகசியம்.
சில மாதங்களுக்கு முன்னே முதலமைச்சர் அம்மா அவர்களை
கமல் சந்தித்தபோதே நான் எனது நண்பர்களிடம் சொன்னேன்.
“ விஸ்வரூபம் பிரச்சனையை சந்திக்கும்.
அதற்கு இப்பவே காய் நகர்த்தி விட்டார்”

தேவர் மகன் தயாரிப்பில் இருந்த நேரம்.
கோவை ஏரியாவை  25 லட்சத்திற்கு கேட்டார்கள்.
கமல் 35 லட்சம் கேட்டார்.
ரஜினி படம் 25 லட்சத்திற்கு வியாபாரம் ஆகும் காலம்.
எனவே கமலின் மானேஜர் டி.என்.எஸ் ,
“நல்ல விலை தம்பி.கொடுத்து விடலாம்” என்றார்.
கமல் சொன்னார்...
“அவர்கள் கேட்கும் விலைக்கு விற்பதல்ல வியாபாரம்.
நாம் சொல்லும் விலைக்கு வாங்க வைப்பதே வியாபாரம்”.
இறுதியில் கமல் சொன்ன விலைக்கே விற்கப்பட்டது.
வாங்கியவருக்கும் பல மடங்கு லாபம் கிடைத்தது.


விஸ்வரூபத்தின் வெற்றி பற்றி .001 சதவீதம் சந்தேகம் எனக்கில்லை.
எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
இந்திய சரித்திரத்தின் அத்தனை வசூல் ரெக்கார்டையும் முறியடிக்கப்போகிறார்.

விஸ்வரூபத்தை படமாக எடுக்கவில்லை.
ஹாலிவுட்காரன்களை மிரட்ட ஒரு விசிட்டிங் கார்டு தயாரித்துள்ளார்.
ஹாலிவுட் தொழில் நுட்ப ஸ்டூடியோக்களையும்...
தொழில் நுடப வல்லுனர்களையும் அவர் பயன்படுத்தியது ஹாலிவுட்டை தன்னை நோக்கி இழுக்கத்தான்.
பந்திக்கு முந்தியவர் லார்டு ஆப் த ரிங் தயாரிப்பாளர்.

ஹாலிவுட்டில் அவர் இன்னும் விஸ்வரூபமெடுப்பார்.
அப்போது தெரியும்!
கமலுக்கு கீழே யார் இருக்கிறார்கள் என்று.
என்னால் நிச்சயம் சொல்ல முடியும்...
டொரண்டினோ,நோலன்...போன்ற  சின்னப்பசங்களெல்லாம்   
கமலின் முழங்காலுக்கு கீழே இருப்பது உலகறியும்.
அதற்காக கேமரூன், பொலன்ஸ்கியெல்லாம் தாண்டி விடுவார் என பொய்யுரைக்க மாட்டேன்.

ஆனால் ஒன்று...விஸ்வரூபத்திற்கு பிறகு இனி தமிழ்ப்படம் செய்வாரா என்பது கேள்விக்குறிதான்.
ஹாலிவுட் அவரை தத்தெடுத்துக்கொண்டு திருப்பித்தராது.
தமிழ்த்தாயின் தவப்புதல்வன் உலகை ஆளட்டும்.
வாழ்த்துவோம்...ஆனந்த கண்ணீரோடு.

ஆரோ 3டி சவுண்ட் செய்யப்பட்ட தியேட்டர் லிஸ்ட்டை கமல் தனது பேஸ் புக்கில் வெளியிட்டுள்ளார்.
இதோ லிஸ்ட்...




அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Jan 18, 2013

திருட்டு வீடியோவை ஒழிக்க முடியாது. [ பாகம் 1 ]


நண்பர்களே...
பழைய தொழிலை விட்டு விட்டேன்.
புதிய தொழில் தொடங்க பல வழிகளில் முயற்சித்து வருகிறேன்.
உட்கார்ந்து தின்றால் மா மலையும் கரைந்து போகும்.
பேங்க பேலன்ஸ் சிறுவாணி நீர் போல் வெகுவாக குறைந்து விட்டது.
நம்பிக்கை மட்டும் குறையவில்லை.
சிறுவாணி டேம், இரண்டு நாள் மழையிலேயே...
கோவையின் ஒரு வருட தேவையை சப்ளை செய்யத்தயாராகி விடும்.
இது வரலாறு.

புதிய தொழில் தொடங்கி பலமாக கால் ஊன்றும் வரை உலக சினிமாவை
அதிகமாக எழுத முடியாது.
மிக எளிய உழைப்பில் உருவாக்க முடியும் பதிவுகளே இனி எழுத முடியும்.
மன்னிக்கவும்.

திருட்டு வீடியோ பற்றி பலரும் எழுதி இருப்பார்கள்.
எனக்கு 1980லிருந்து அதன் வரலாறு ஒரளவு தெரியும்.
அப்போது வீடியோ கேசட் என்ற பார்முலாவில்தான் திரைப்படம் பார்க்க முடியும்.
எழுபதுகளில் உருவான வீடீயோ கேசட் எண்பதுகளில் தமிழ்நாட்டை ஆட்சி
செய்தது.

எழுபதுகளில் தமிழ் திரைப்படங்களை ஒரிஜினல் வீடியோ கேசட்டுகளாக
வெளியிடுவதில் முன்னணி நிறுவனங்கள் வி.ஜி.பி., ஏ.வி.எம். மட்டுமே.
சென்னை தேவி தியேட்டர் காம்ப்ளக்ஸ்காரர்கள் அவர்கள் தயாரித்த கொஞ்சும் சலங்கை, அழியாத கோலங்கள், நெஞ்சத்தை கிள்ளாதே போன்ற படங்களை அட்டகாசமான தரத்தில் வெளியிட்டார்கள்.
இவர்கள் கேசட்டுகளில் இருக்கும் திரைப்படங்கள் சும்மா தக தகன்னு மின்னும்.

உலகத்தமிழ் வீடியோ உலகில் முதன் முறையாக,
புதிய தமிழ் திரைப்படங்களை திருட்டு வீடியோவில் தயாரித்து மார்க்கெட்டில் புழங்க காரண கர்த்தர்கள்...
இன்றும் படங்கள் தயாரிக்கும் பராம்பரிய நிறுவனம்தான்.
இவர்களது ஸ்டூடியோவில் உள்ள பிரிவ்யூ தியேட்டரில்,
வீடியோ கேமராவை செட் பண்ணி திருட்டு வீடியோ தயாரித்து வந்தார்கள்.

தயாரித்த கேசட்டை லண்டனை சேர்ந்த பஞ்சா என்பவர் வாங்கிக்கொண்டு போய் வெளிநாட்டில் காப்பியெடுத்து உலகம் முழுக்க பரப்பி விடுவார்.
சிங்கப்பூர், மலேசியாவிற்கு அப்பு என்பவர் பரப்புவார்.
கொஞ்சம் ஏமாந்தால் ஒருவர் ஏரியாவிற்குள் இன்னொருவர் புகுந்து விற்று விடுவார்கள்.
இலங்கைக்கு, மதுரையில் இன்றும் இருக்கும் முன்னணி ஜவுளி நிறுவனத்தார் வாங்கி அனுப்பி வந்தனர்.
[இவர்கள் கடை விளம்பரம் இது வரை டிவியில் வந்தது கிடையாது.]

பஞ்சா சென்னை வந்தால் தாஜ் கோரமண்டல் என்ற பைவ் ஸ்டாரில் தங்குவார்.
அப்பு மாரிஸ் ஹோட்டலில் தங்குவார்.
இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்தால் கட்டித்தழுவுவார்கள்.
எனக்கு காட்பாதர் படம் பார்க்கும்போதெல்லாம் இவர்கள்தான் ஞாபகத்துக்கு வருவார்கள்.

முன்னணி நிறுவனத்தின் திருட்டு வீடியோ வியாபாரத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர் யாரு ?
நம்ம... டி.ஆரு.

விபரம் அடுத்தப்பதிவில். 

Jan 16, 2013

கண்ணா ‘பூந்தி’ தின்ன ஆசையா...


நண்பர்களே...
இந்த பொங்கலுக்கு ‘ரியல் ஹிட்’ கண்ணா லட்டு தின்ன ஆசையாதான்.
பாக்யராஜின் பூந்தியைத்தான் லட்டாக்கியிருக்கிறார்கள்.
லட்டில் முந்திரி பருப்பாக சந்தானமும்...
கிஸ்மிஸ் பழமாக பவர் ஸ்டாரும் கலந்திருப்பதால் ருசிக்க முடிந்தது.


பாக்யராஜின் இன்று போய் நாளை வாவில் இட்ம் பெற்ற காட்சிகள்,
‘லட்டுவில்’ ஜெராக்ஸ் செய்யப்பட்ட இடத்தில் மட்டும் என்னால் சிரிக்க முடியவில்லை.
முந்தைய படத்தில் இடம் பெறாத ஜோக்குகளுக்கு சிரித்து கொண்டாடினேன்.
ஆனால் இன்றைய தலைமுறை ரசிகர்கள் மொத்தப்படத்தையுமே ரசித்து கொண்டாடி விட்டார்கள்.


இ.போ.நா.வாவில் இடம் பெற்ற பாக்யராஜ், ராதிகா,கல்லாப்பெட்டி சிங்காரம், ஹிந்தி வாத்தியார்  காரெக்டர்களை இப்படத்தில் சுமந்தவர்கள் ஒரிஜினல் முன்னால் நிற்கக்கூட முடியாமல் பரிதாபமாக காட்சியளித்தார்கள்.
ஒரிஜினல் ஒரிஜினல்தான்.

பவர்ஸ்டார் + சந்தானம் கூட்டணிதான் இப்படத்தின் பலமே.
பவர்ஸ்டாரை நான் முதன்முதலில் பார்த்தது  ‘நீயா நானா’வில்தான்.
கோபிநாத்தின் அகந்தைக்கேள்விகளை,
தனது எளிய புன்னகை மற்றும் அலங்காரமில்லாத பேச்சால் அட்டகாசமாக அடித்து நொறுக்கினார் பவர்ஸ்டார்.
அன்று அவர் சொன்ன ரசிகர் கணக்கு இன்று நிஜமாகி விட்டது.


பவர்ஸ்டாருக்கு நடிப்பு சுத்தமாக வரவில்லை.
ஆரம்ப நாட்களில் நடிகர் செந்தில் அப்படித்தான் இருந்தார்.
கவுண்டமணியோடு இணைந்த பிறகே நடிப்பு, புகழ், பணம் எல்லாம் தானே வந்து விட்டது.
சந்தானத்தோடு இணைந்து பத்து படம் நடித்தால் நடிப்பு நிச்சயம் வந்து விடும்.
பவர்ஸ்டாரின் வருங்காலம் சந்தானம் கையில்தான்.

பாக்கியராஜ் பட கிளைமாக்சை விட, ’லட்டில்’ கிளைமாக்ஸ் பெட்டராக இருந்தது.
சிம்புவை உள்ளே நுழைத்ததில் நிச்சயம் கிரியேட்டிவிட்டி இருந்தது.


அலெக்ஸ் பாண்டியனும் பார்த்து விட்டேன்.
அலெக்ஸ் பாண்டியன் குழுவினரும்...
ஈமு கோழி வளர்ப்பு மோசடி நிறுவனங்களும் ஒன்றே.
ஈமு மோசடியை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க முடியும்.
இவர்களை ?

பொங்கலுக்கு,
தமிழ் சினிமா ரசிகனாக மூன்று படங்கள் காணக்கிடைத்தன.
உலகசினிமா ரசிகனாக, ஒரு மண்ணும் கிடைக்கவில்லை.
ஆனால்,இன்று விஜய் டிவி பகல் 12 மணிக்கு ‘ஆரண்ய காண்டத்தை’
பொங்கல் விருந்தாக படைக்கிறது.
நன்றி விஜய் டி.வி.  
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.