Apr 11, 2013

அஞ்சலிக்காக... இயக்குனர் வசந்தபாலனின் விழி நீர்கள்.


நண்பர்களே...
நடிகை அஞ்சலி குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள்...
அதன் கருத்துருவ பிம்பங்கள்...
கற்கால மிராண்டிகளாக நம்மை உருமாற்றம் செய்யும் பணியை செவ்வன செய்து வருகின்றன.

கற்றது தமிழ், அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் மூலமாக...
‘நவீன சாவித்திரியாக’ நம்மை மகிழ்வித்தவள் அவள்.
அஞ்சலி எல்லாப்பிரச்சனைகளிலிருந்து கடந்து போக...
எல்லா வல்ல கடவுளை பிரார்த்திப்போம்.
அஞ்சலி குறித்த கிசுகிசுக்களை புறக்கணிப்போம்.
இப்படிக்கு,
உலகசினிமா ரசிகன்.



இயக்குனர் வசந்தபாலன், அஞ்சலிக்காக  ‘முகநூலில்’ வடித்த
கண்ணீர்ப்பூக்களை உங்கள் பார்வைக்கு காணிக்கையாக்குகிறேன்.

கற்றது தமிழ் படம் பார்த்த போது
நெசமாத்தான் சொல்றீயா என்று அஞ்சலி
பல இடங்களில் கேட்கும் போது
எனக்கு மிக மானசீகமான பெண் கேட்பது
போன்ற சித்திரத்தை ஏற்படுத்தியது.
பறவையே எங்கு இருக்கிறாய் என்ற பாடலில்
அவள் சுடிதாரின் நிறம்
வாழ்க்கைக்கு மிக நெருக்கமானதுமான பொருளாக உணர முடிந்தது. சுடிதாரை வேண்டாமுன்னு சொல்லும் போது
மனஎழுச்சியூட்டும் சித்திரங்களை எழுப்பியடியிருந்தாள்.
உனக்காக தான் இந்த உயிர் உள்ளது என்ற பாடல்
எல்லையற்ற மனதின்
சந்தோச பெருவெள்ளத்தில்
காதலை தேடும் ஒருவனின் மன வெளியை பிரதிபலிப்பதாக இருந்தது.
அதில் அஞ்சலி உருவாக்கிய சித்திரங்கள்
ஒரு இலக்கிய நினைவூட்டலாக இருந்தது.
ரத்தமும் சதையுமான
பல்வேறு பெண்களின் சித்திரங்களை
அஞ்சலி தனக்குள் கொண்டிருந்தாள்.
ஒரு வானம் பல்வேறு வண்ணங்களை எழுப்பி எழுப்பி காட்டுவது போல பல்வேறு மத்திய ரக பெண்களில் ஒன்றாக எனக்கு தோன்றினாள்.
இப்படியாக அந்த படம்
என் மனசுக்குள் ஆயிரம் எண்ணங்களை உசுப்பி விட்டது/
மஹாராஸ்ராவில் எங்கோ மாமாவின் வீட்டில் அவள் தங்கியிருப்பாள்
ஜீவா போய் பார்க்க போவார்
அதன் பிறகு ஒரு விபசாரவிடுதியில் அஞ்சலியை பார்ப்பான்.
இப்படியாக அவளின் துயரம்
இருளுக்கும் இருண்மைக்கும் புதிருக்கும் நடுவே
ஒரு முறுக்கப்பட்ட கயிறாக சுற்றியபடியேயிருக்கும்.
இப்படியாக இந்த படம் பல்வேறு மின்மினிகளை
மனதிற்குள் பறக்கவிட்டபடி நிறங்களை உதறியபடியே இருந்தது.
ஒரு புதிய பெண் இத்தனை அழுத்தமாக அழகாக
பல்வேறு விதமான கால கட்டங்களை
மனதில் கொண்டு வந்து நடித்துவிட்டாளே என்று தோன்றியது.
நம்பிக்கையான புதிய வரவு என்று தோன்றியது

அங்காடித்தெரு படத்திற்காக
சேர்மக்கனி கதாபாத்திரத்தில் நடிக்க
பல புதிய பெண்களை பார்த்துக்கொண்டிருந்தேன்,
கதைநாயகன் மகேஷ் என்று முடிவானவுடன்
இது காதல் படம்
இவனும் புதுசு
கதாநாயகியும் புதுசுன்னா
இரண்டு பேரும் தயக்கத்திலேயே கூச்சத்திலே
காதல் காட்சிகளில் விலகி விலகி நடித்து
காதலை கொண்டு வராமல் சொதப்பி விடுவார்கள்
என்று எண்ணினேன்.
உடனே என் மனசுக்குள் வந்த ஒரு உருவம் அஞ்சலி.
அவளை பார்க்க வேண்டும் என்று அழைத்தேன்,
அவள் அம்மா(இப்போது சித்தி)வுடன்
ஜிலுஜிலு சுடிதாருடன் வந்தாள்.
உடனே குழப்பமாக இருந்தது.
வேறு சுடிதார் வாங்கி வந்து டெஸ்ட் சூட் பண்ணினேன்,
கதை நாயகன் மகேஷ்
பெண் என்பதால் தயங்கினான்,
விலகி நின்றான்,
அவன் தயக்கத்தை புரிந்து கொண்டு
நான் பிரச்சினையை விளக்காமலே
அஞ்சலி அந்த நெருக்கத்தை வரவழைத்து நடித்தாள்.
மிக அற்புதமான ரசாயன மாற்றம் இருந்தது,
இருவரும் நல்ல ஜோடி என்று தோன்றியது.
உடனே அஞ்சலியை தேர்வு செய்தேன்.
படப்பிடிப்பு துவங்கியது.
மெல்ல மெல்ல சேர்மக்கனியாக மாறத்துவங்கினாள்
முதல் 3 நாட்களில் படத்தின் அதி முக்கியமான காட்சியை
படமாக்கும் போதே அற்புதமான நடிப்பை வழங்கத்துவங்கினாள்,
என் மனம் மலர்ந்தது
கதைக்கு உயிர் வந்தது,
மகேஷ் சுமாராக நடிக்கும்
பல இடங்களில் அஞ்சலி துரக்கி சாப்பிடத்துவங்கினாள்,
கவனம் அவள் பக்கம் திரும்பியது,
மகேஷ் நடிக்க தயங்கிய
நெருக்கமான காதல் காட்சிகளில்
அவனின் கூச்சத்தை இவள் போக்கினாள்.
இடைவிடாது அவனிடம் பேசிபேசி நெருக்கத்தை வரவழைத்துக்கொண்டாள் அங்காடித்தெரு திரைப்படத்தில்
காதல் இத்தனை அழுத்தமாக வந்தது அஞ்சலியால் தான்.
பாசாங்கற்ற பெண்.
புத்திசாலி.
ஒரு இயக்குனரின் கதாநாயகி.

காலம் அவள் நடிப்பைக்கண்டு கொண்டது.

அவளின் உலகம்
கனவின் மர்ம வெளிகளாலும் பைத்திய நிலையின் பல்வேறு புதிர்களாலும் நிலைகளாலும் கட்டப்பட்டவை.
கனவுக்கும் நனவுக்குமிடையே
யதார்த்தத்திற்கும் புனைவிற்கும் இடையே
எப்போதும் பெருகி கரைபுறண்டு ஓடிக்கொண்டிருக்கும்
ரகசிய நதியின் கரையில் அவள் வாழ்கிறாள்,
வாழ்வின் சூட்சுமமான முடிச்சினை அவிழ்த்தபடி
காலத்தின் சரித்திரத்தின் எல்லையற்ற விகாசத்தில்
அவள் அத்தனை துயரத்தோடு சஞ்சரித்தபடியே இருக்கிறாள்,
கடந்த காலத்தின் மெல்லிய ஏக்கம் கனவு துயரம் ரகசியம்
அவளின் முகத்தில் தெரியாதபடி புன்னகையால் மறைத்தபடியிருந்தாள்,
அவளை பற்றிய அத்தனை சித்திரங்களும்
மாய காற்றில் மிதந்தபடியிருக்கின்றன.
அவள் ஏக்கத்தின் வெக்கையும் கனவின் பெருவிம்முதலும்
எப்போதும் தன்னுடன் வைத்துக்கொண்டவளாக அவள் இருக்கிறாள்
விதியின் மாபெரும் கதை.
அவள் விநோதமானதும் கொடூரமானதுமான வாழ்க்கையை
வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
அழகியல் வரம்புக்குள் சிக்காத
எத்தனையோ அழகிகளில் அவளும் ஒருத்தி,
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
பாடலில் வரும் சிறுசிறு ரியாக்சன்
அத்தனை அழகாக இருக்கும்.

இன்று அவள் மீது சுமத்தப்படும பிம்பங்கள்
கனவுகளற்ற உலர்ந்த விச மொழியில் உள்ளது,
விரிக்கப்படும் அத்தனை கனவுகளும்
மாய மொழியிலும் வியாபார நிமிர்த்தமான மீறல்கள் கொண்டதாக உள்ளது.

திரைக்குடும்பத்தில் இல்லாத ஒரு பெண்
திரைத்துறையில் நுழைய
எத்தனை ஒரு பெரிய விலை கொடுக்கவேண்டியிருக்கிறது.
நிறைய மர்மமான பொய்களையும் புதிர்களையும்
அவிழ்க்க வேண்டியிருக்கிறது.
அதீத புனைவுக்குள் நுழைய வேண்டியிருக்கிறது
இந்த கதைகளை கேட்கும் போது
அந்த மனிதர்களை பார்க்கும் போது
வாழ்வின் மதிப்பீடுகளும் கனவுகளும் உடைந்து நொறுங்குகின்றன.

அவள் பிரச்சினைகள் அத்தனையும் தீர்ந்து
புதிதாக மீண்டு வர இறையை வேண்டுகிறேன்.

Apr 10, 2013

பச்சோந்தி


“ கடிக்கவா செய்கிறாய்!...அசட்டு நாயே!
பசங்களே, விடாதீங்க!
இந்தக்காலத்தில் கடிக்க அனுமதி இல்லை. பிடியுங்கள் அதை”
என பஜாரில் எழுந்த கூச்சல் போலிஸ் இன்ஸ்பெக்டர் காதில் விழுந்தது.

நாய் ஊளையிடும் சப்தம் கேட்டது.
இன்ஸ்பெக்டர் சத்தம் வந்த திசையை நோக்கினார்.
கஞ்சி போட்ட பூச்சட்டையும், பட்டன் போடாத அரைக்கோட்டும் அணிந்தவர்
அந்த நாயின் பின்னங்கால்களை பிடித்துக்கொண்டிருந்தார்.
அந்த ஏரியாவை சிறு கூட்டம் மொய்த்துக்கொண்டிருந்தது.

“ ஐயா, கலவரம் மாதிரி தெரிகிறதே!” என்றார் உடனிருந்த போலிஸ்காரர்.

இன்ஸ்பெக்டர் கூட்டத்தை நோக்கி விரைந்தார்.
 ‘அரைக்கோட்டு’ ரத்தம் கசியும் தனது விரலை கூட்டத்திற்கு காட்டிக்கொண்டு நிற்பதைக்கண்டார்.
“ சனியனே, உன்னை என்ன செய்கிறேன் பார்” என அவரது  ‘குடிகார முகத்தில்’ எழுதி ஒட்டியிருந்தது.
கூட்டத்தின் நடுமையத்தில் அந்தக்குற்றவாளி நாய் நடுங்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தது.
கலங்கிய அதன் கண்களில் சோகமும் பீதியும் சம அளவிலிருந்தது.

கூட்டத்தை இடித்து விலக்கி கொண்டு வந்த இன்ஸ்பெக்டர் முழங்கினார்.
“ என்ன இதெல்லாம்?
இங்கே ஏன் கூடி நிற்கிறீர்கள்?
நீ ஏன் விரலை உயர்த்திக்கொண்டு நிற்கிறாய்?”

“ ஐயா, எந்த வம்புமின்றி நடந்து வந்து கொண்டிருந்தேன்.
ஒரு காரணமும் இல்லாம இந்த நாய் என் விரலை கடிச்சு வச்சிருச்சு.
நான் மர வேலை செய்யறவன்.
என்னுடைய வேலை நுட்பமானது.
இன்னும் ஒரு வாரத்துக்கு என் விரலை அசைக்க கூட முடியாது.
நீங்கதான் எனக்கு இழப்பீடு வாங்கித்தரணும்.
இந்த மூர்க்கப்பிராணிகளின் கொடுமைகளை சகித்துக்கொண்டு வாழணும்னு எந்த சட்டமும் கூறவில்லை.
இவையெல்லாம் கடிக்க ஆரம்பித்தால், வாழ்க்கையே நரக வேதனையாகி விடும்”.

“ஊம்...சரிதான்,சரிதான்...யாருடைய நாய் இது?
இந்த விவகாரத்தை சும்மா விடப்போவதில்லை.
நாய்களை கண்டப்படி ஓடித்திரியும்படி விடுவோருக்கு தக்க பாடம் கற்பிக்கப்போகிறேன்.
நாய்களையும், மாடுகளையும் இஷ்டத்துக்கு திரிய விட்டால் என்ன கிடைக்கும் என தெரியப்படுத்தப்போகிறேன்”

போலிஸ்காரனை நோக்கி ஆணை பிறப்பித்தார்.
“ இந்த நாய் யாருடையது என கண்டு பிடித்து அறிக்கை ஒன்றை தயார் செய்.
உடனே இந்த நாயை ஒழித்துக்கட்டியாக வேண்டும்.
வெறி பிடித்த நாயாகத்தான் இருக்க வேண்டும்.
யாருடையது இது?

“ போலிஸ் ஐ.ஜியுடையது” என கூட்டத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

“போலிஸ் ஐ.ஜியுடையதா! ஓஹோ...
கான்ஸ்டபிள்...என்னுடைய கோட்டை கொஞ்சம் கழட்டி விடு.
உஸ்ஸ்ஸ்...வெக்கை தாங்க முடியலையே!
மழை வரப்போகுது...அதான் இப்படி புழுங்குகிறது”

‘அரைக்கோட்டை’ நோக்கினார் இன்ஸ்பெக்டர்.
“ எனக்கு இது புரியல.
உன்னை இது கடிச்சுதா! எப்படி?
உன் விரல் எப்படி இது வாய்க்கு எட்டிச்சு?
இது சின்னஞ்சிறு நாய்.
நீயோ வாட்ட சாட்டமான ஆள்!
ஆணியில் விரலை கீறி இருப்பாய்,
இதைக்காட்டி இழப்பீடு வாங்கலாமென்று ஐடியா தோன்றி இருக்கும்.
உன்னை போன்ற ஆட்களை எனக்குத்தெரியும்.
எமகாதகனுங்க”

“ ஐயா, இந்த ஆளு எரியுற சிகரட்டை...நாயோட  மூக்கின் அடியில் வச்சு...
சுட்டு  வேடிக்கை பார்த்தார்.
உடனே அது விழுந்து புடிங்கிருச்சு.
அது ஒண்ணும் அசட்டு பிறவி இல்லையே!
இந்த ஆள் எப்பவுமே இப்படித்தான்.
சேட்டை செய்யாம இருக்க முடியாது”.

“யோவ்...போலிசு, ஏன் இப்படி புளுகுறே.
இன்ஸ்பெக்டர் ஐயாவுக்கு எல்லா விவரமும் தெரியும்.
பொய் பேசுறது யார்?
உண்மை பேசுறது யார்னு அவருக்கு தெரியும்.
நான் சொல்வது பொய்யென்றால் நீதிபதி என்னை விசாரிக்கட்டும்.
சட்டம் சொல்லியிருக்கு...
இன்று எல்லோரும் சரிநிகர் சமானம்.
உனக்கு சொல்றேன்... ஒண்ணு.
போலிசில் எனக்கு யாரும் இல்லாம போகலை.
என் சகோதரர் ஒருவர் இருக்கிறார்”.

“இல்லை...இது ஐ.ஜி ஐயாவோட நாய் இல்லை” என்றார் போலிஸ்காரர் அழுத்தம் திருத்தமாய்.
“ ஐ.ஜி ஐயாவிடம் இம்மாதிரி சாதரண நாட்டு நாய் எதுவும் இல்லை.
அவரிடம் இருப்பவை எல்லாமே உயர் ஜாதி மோப்ப நாய்கள்”.

“ நிச்சயம்தானா?”

 “சந்தேகமே வேண்டாம் ஐயா”

“ நீ சொல்வது சரிதான்.
ஐ.ஜி ஐயாவோட நாய்கள் உயர்ரகமானவை.
இதைப்பாரேன்.
சகிக்கவில்லை.
தெருச்சனியன்.
இது மாதிரி நாயை எவனும் வீட்டில் வச்சிருப்பானா?
பைத்தியம் பிடிச்சிருச்சா உனக்கு?
பெரிய நகரங்களில் இப்படி திரிஞ்சா என்னாகும் தெரியுமா?
சட்டத்தை பற்றி யாரும் கவலைப்படமாட்டங்க.
அந்த நிமிஷமே முடிவு கட்டிருவாங்க.
எப்பா...நீ கடிபட்டு இழப்புக்கு உள்ளானவன்.
இந்த விஷயத்தை இப்படியே விட்டுறக்கூடாது.
தக்க பாடம் கற்பித்தாக வேண்டும்.
ஆமாம்...இதை உடனே செஞ்சாகணும்.

“ ஒரு வேளை ஐ.ஜி ஐயாவோட நாய்தானோ என்னமோ” என்று போலிஸ்காரர் மெதுவாக கூறி விட்டு சிந்திக்கலானார்.
‘யாருடையது என்று இது மூஞ்சியிலா எழுதி ஒட்டியிருக்கு?
அண்ணைக்கு இது மாதிரி ஒரு நாய் அவர் வீட்டு முற்றத்தில் இருந்த மாதிரி இருந்துச்சு’.

“ போலிஸ் ஐ.ஜியோட நாய்தான்.
சந்தேகமே வேண்டாம்” என்று கூட்டத்திலிருந்து அந்தக்குரல் மீண்டும் ஒலித்தது.

“ ஓ! இந்த கோட்டை என் மீது மாட்டு.
ஜில் காத்து வீசுது.
குளிருது.
இதை ஐ.ஜி.ஐயாவோட வீட்டுக்கு அழைச்சுகிட்டு போ.
நான் இதைக்கண்டதாகவும்... அனுப்பி வைத்ததாகவும் சொல்.
தெருவிலே விட வேண்டாமென்று...வேண்டுகோளாக கூறி விட்டு வா.
இது விலை உயர்ந்த நாயாகத்தான் இருக்க வேண்டும்.
ஊரிலுள்ள முரடர்கள் இதன் மூக்கில் சிகரெட்டை திணிக்க முற்பட்டால் உருப்படாமல் அல்லவா போய்விடும்.
நாய் மென்மையான பிராணி!.
முட்டாளே! கையை கீழே இறக்கு.
அசிங்கமா அந்த விரலை எல்லோருக்கும் காட்டிகிட்டு நிக்காதே.
குற்றம் உன்னுடையதுதான்”.

“ ஆஹா...ஐ.ஜி ஐயாவோட வீட்டு சமையற்காரர் வருகிறாரே.
அந்தாளை  கேட்டாப்போச்சு!
யோவ்...இங்கே வாய்யா.
இந்த நாயைப்பார்.
உங்க வீட்டு நாயா இது?”

“நல்லாயிருக்கே!
இந்த மாதிரி ஒரு நாய் எங்களிடம் எந்நாளும் இருந்ததில்லை!”

“இனி யாரையும் விசாரிக்கத்தேவையில்லை” என்றார் இன்ஸ்பெக்டர்.
“ இது தெரு நாய்தான்.
இனி பேசிகிட்டு நிக்கறதில்ல அர்த்தமில்ல.
இதை இழுத்துகிட்டு போய் ஒழிச்சு கட்டு.
இதோடு விவகாரம் தீர்ந்து போகட்டும்”

“ இது எங்களுடைய நாயல்ல” என்ற சமையற்காரர் தொடர்ந்தார்.
“ இது ஐ.ஜி. ஐயாவோட சகோதரருடையது.
சில நாட்களுக்கு முன்புதான் அவர் வந்தார்.
எங்க ஐயாவுக்கு நாய்கள் பிடிக்காது.
ஆனால், ஐயாவோட சகோதரருக்கு... நாய்கள் என்றால் உயிர்”

“ என்ன! ஐ.ஜி ஐயாவோட சகோதரர் வந்திருக்காரா?” என்றார் இன்ஸ்பெக்டர்.
ஆனந்தத்தால் அவரது முகம் பூரித்து விட்டது.
“ எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி இது.
எனக்கு தெரியாம போச்சே!
இனி இங்கேயே தங்கி விடப்போகிறாரா?

“ ஆமா. இனி இங்கேதான் இருக்கப்போகிறார்”.

“ எதிர்பாராத நல்லசெய்தி!
 ‘அவருடைய’ நாயா இது!
ரொம்ப சந்தோஷம்.
வீட்டுக்கு அழைத்துச்செல்.
அற்புதமான நாய்க்குட்டி!
இந்த ஆள் விரலைக்கடிதாயா நீ?
ஹ..ஹ...ஹா..ஹா!
பரவாயில்லை.
பயப்படாதே!”

“ உர்..உர்..உர்ர்ர்ர்ர்ர் ”.

“ பொல்லாத குட்டி...புஜ்ஜூ குட்டி...
கோபம் பொத்துக்கொண்டு வருகிறது!
அருமையான நாய்க்குட்டி!”

சமையல்காரன் நாயை அழைத்துக்கொண்டு சென்றான்.
கூட்டத்தினர் ‘அரைக்கோட்டை’  பார்த்து சிரித்தனர்.

“இருடா...உனக்கு செம்மையா தர்றேன்” என இன்ஸ்பெக்டர் அவனை மிரட்டினார்.
பிறகு தனது மேல் கோட்டை இழுத்து விட்டுக்கொண்டு பஜாரின் குறுக்கே நடந்தார்.

*********************************************************************************

நண்பர்களே...
இச்சிறு கதை,
‘ரஷ்ய இலக்கிய மாமேதை’ அந்தோன் சேகவ் [ ANTON CHEKHOV ] படைத்தது.
ரஷ்யசூழலில் எழுதப்பட்டதை நமது சூழலுக்கு ஏற்றவாறு கதையை உங்களுக்கு வழங்கியுள்ளேன்.

1904ல் அந்தோன் சேகவ் மறைந்து விட்டாலும்,
அவரது படைப்புகள் சாகா வரம் பெற்று வாழ்கின்றன்.
உலகம் முழுக்க பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு சேகவ் கொண்டாடப்படுகிறார்.
ஏனெனில் சேகவ், உண்மையை எடுத்துரைக்கிறார்...
உள்ளதை உள்ளபடிக்கூறி உள்ளத்தை ஒளி பெறச்செய்கிறார்.

மனிதனின் நிலையை மனிதனுக்கு தெரியப்படுத்தும் போது,
மனிதன் மேம்படுவான் என்று சேகவ் கூறி வந்தார்.

வாசகர்களை ஒன்றும் தெரியாத சிறு பிள்ளைகளாகவோ,
சிந்தனையற்றவர்களாகவோ கருதி,
ஒவ்வொன்றுக்கும் தாமே தீர்வை தயாரித்தளிக்க முயலவில்லை,
அவர்களுக்கு உபதேசிக்க முற்படவில்லை.
தாம் எழுதுவதை வாசகர்கள் கூர்ந்து நோக்குவர்,
சிந்தனை செய்வர்,
பிழையின்றி புரிந்து கொள்வர் என்று சேகவ் திடமாக நம்பினார்.
 
சேகவ் படைப்பை வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி...
அந்தோன் சேகவ் 
சிறுகதைகளும் குறு நாவல்களும்.
எதிர் வெளியிடு,
96, நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி- 642002
தொலைபேசி : 04259 226012, 98650 05084.

அந்தோன் சேகவ் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விக்கிப்பீடியாவிற்குள் செல்க.
 http://en.wikipedia.org/wiki/Anton_Chekhov 

சேகவ் படைத்த மற்றொரு சிறந்த சிறுகதையை,
நீங்கள் விரும்பினால் எழுதுகிறேன்.

"The Thirty-Six Dramatic Situations"-
both by Carlo Cozzi (1720-1806) 
and Georges Polti (1867-1946)= ற்றி விரிவாக இனி வரும் பதிவுகளில் காணலாம்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Apr 8, 2013

சென்னையில் ஒரு நாளில் தரிசிக்கும் மாந்தர்கள்.


நண்பர்களே...
'சென்னையில் ஒரு நாளின்' மூலமான  'டிராபிக்கையும்' பார்த்து விட்டேன்.
இரண்டில் எது நன்றாக இருக்கிறது என்ற கேள்விக்கு,
விஸ்வரூத்தில் கமல் சொல்லும் பதில்தான்...
“ தாஃபிக் நல்ல பெயர்தான்.
ஆனால் என் பெயர் நாசர் ”



விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட இளைஞனது காதலி மலையாளத்தில்,  விவாக ரத்து  பெறும் நாயகி.
தமிழில் அக்கதாபாத்திரம் ‘ஸ்பெஷல் குழந்தைகளுக்கான’ ஆசிரியையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
எனவேதான் அவள் உணர்வுரீதியாக முடிவெடுக்காமல்,
அறிவுரீதியாக முடிவெடுக்கும் திறனோடு இருப்பது மிகப்பொருத்தமாக இருக்கிறது.
தனது காதலன் இதயத்தை தானமாக்கி, சரித்திரத்தில் அவனது பெயரை நிரந்தரமாக்க செயலாற்றுகிறாள்.
உணர்ச்சி கொந்தளிப்பிலிருக்கும் காதலனின் பெற்றோரை,
அறிவார்ந்த நிலைக்கு மாற்றி செயல்பட வைக்கிறாள்.

மகனை இழந்த பெற்றோர் தனது மகனின் காதலியிடம்,
‘வீட்டிற்கு வர முடியுமா ?’ என அழைக்கின்றனர்.
அவளும் அழைப்பை ஏற்று வருவதாக ஒப்புக்கொள்வாள்.
அந்த போன் கால் வரும் போது அவள் காலியான வகுப்பறையில் தனிமையில் இருக்கும் ஒரு ஷாட்டை கவித்துவமாக அமைத்திருப்பார் இயக்குனர்.

இக்காட்சி  ‘த சன்’ஸ் ரூம்’ என்ற இத்தாலிய உலகசினிமாவை நினைவு படுத்தியது.
விபத்தில் மகனை பறி கொடுத்து துன்பத்தில் ஆழ்ந்திருப்பார்கள் பெற்றோர்.
மகனின் காதலி அவர்களை துன்பக்கடலிலிருந்து மீட்டெடுப்பாள்.
இப்படத்தை நான் பார்த்து பத்தாண்டுகள் ஆகியும் சில காட்சிகள் கோட்டோவியம் போல் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.
நண்பர்கள் இப்படத்தை தவறாமல் பார்க்கும்படி பரிந்துரைக்கிறேன்.

THE SON'S ROOM \ 2001 \ ITALY \ DIRECTED BY NANNI MORETTI


லஞ்சம் வாங்கி பிடிபட்டு சஸ்பெண்டாகி இருக்கும் டிராபிக் கான்ஸ்டபிள் காரெக்டரும் தமிழில் நன்றாக செதுக்கப்பட்டு உள்ளது.
அக்கதாபாத்திரம் குற்ற உணர்வில் தவிப்பது தமிழில் மிகவும் இயற்கையாக இருக்கிறது.


‘சஸ்பெண்ட் கான்ஸ்டபிளுக்கு’ பரிந்துரை செய்யும் அரசியல்வாதியாக தமிழில் பாலாசிங் நடித்துள்ளார்.
அவர் எந்தக்கட்சி என கண்டுபிடிப்பவர்களுக்கு,
 ஹாட் சீட்டில் உட்கார வைக்காமலேயே...
‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியை’ கொடுத்து விடலாம்.

மலையாளத்தில் அரசியல்வாதி கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவராக அப்பட்டமாக காட்டி உள்ளனர்.
தமிழ் படத்தில் துக்கடாக்கட்சியை கூட,  காட்ட முடியாத நெருக்கடி இருக்கிறது.

[ பிரகாஷ்ராஜின்  ‘கௌரவம்’ படத்திற்கு எதிராக ,
அனைத்து உயர் ஜாதிக்கட்சிகளும் கச்சை கட்டி  தயாராக இருக்கிறது.
ஏனென்றால்  ‘கௌரவம்’, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருக்கிறதாம்.
ஹிட்லர் காலத்தை விட மிகக்கொடுமையான நெருக்கடியை
தமிழ்த்திரை உலகம் சந்தித்து வருகிறது.]


 லஞ்சம் வாங்கிய சகோதரனோடு பயணிக்க மறுத்து ஒதுங்கும் சகோதரி கதாபாத்திரம் உயர்வானது.
ஆனால், தனது கணவன் தினமும் கை நீட்டும் லஞ்சவாதி அல்ல;
சூழ்நிலை காரணமாக தவறிழைத்த தங்கம் என ,
அவனோடு இரு சக்கர வாகனத்தில் ஒன்றாக பயணிக்கும் மனைவி கதாபாத்திரம் மிக மிக உயர்வானது.

படத்தில் இரண்டு விபத்து நடைபெறுகிறது.
ஒன்று, சூழ்நிலை காரணமாக அறியாமல் நடக்கும் விபத்து.
இரண்டாவது, துரோகங்களை சகிக்க முடியாமல் மனைவியை கொல்ல முயற்சிக்கும் விபத்து.
இரண்டாவது விபத்து நடைபெறும் போது தியேட்டரே கைதட்டி ஆரவாரிக்கிறது.
“ சபாஷ்...சரியான தீர்ப்பு ” என்ற வாசகம் கைதட்டலில் வெளிப்படுகிறது.


தன்னை மட்டுமே நேசிக்கும் ஒரு நடிகனும்,
பிறரை நேசிக்க கற்றுக்கொடுக்கும் ஒரு நடிகனும்...
முக்கிய கதாபாத்திரங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த முரணில்தான் நாம் கொண்டாடும் நடிகர்கள் இயங்கி வருகிறார்கள் என்பதை தோலுரித்து காட்டி உள்ளார் இயக்குனர்.

நண்பனின் இதயத்தோடு பயணிக்கும்  ‘இஸ்லாமிய இளைஞன்’,
வழியில் இறங்கி தடைகளை அகற்ற உதவுகிறான்.
வந்த பணி செவ்வனே நிறைவேறியதும்,
புகழ் வெளிச்சம் தேடாமல்...
வந்த சுவடு தெரியாமல் சென்னைக்கு திரும்பும் இந்த லட்சிய இளைஞனிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.


ஒரு மந்திரச்சொல்லை பிரயோகித்து கடமை உணர்வு மிக்க கமிஷனரை
இயங்க வைத்த மருத்துவரும்,
அதே மந்திரச்சொல்லை பிரயோகித்து தனது காவல்துறையை செயல்பட வைத்த போலிஸ் கமிஷனரும் வணங்கத்தகுந்த கதாபாத்திரங்கள்.

இத்தனை நிகழ்வுகளுக்கும் காரணகர்த்தர்கள்,
காரோட்டும் பெண்ணை கலாய்க்கும்  ‘இருசக்கர வாகன காவாலிகள்’.
வலையுலகத்திலும் இது போன்ற  ‘காவாலிகளை’ காண முடியும்.
இவர்களை நம்மால் தவிர்க்க முடியாது.
இது போன்ற கதாபாத்திரங்களோடுதான் நமது வாழ்க்கைப்பயணத்தை தொடர வேண்டி இருக்கிறது.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.  

Apr 2, 2013

சென்னையில் ஒரு நாள் - ஹாட்ரிக் 2013


நண்பர்களே...
விஸ்வரூபம், பரதேசியை தொடர்ந்து  ‘சென்னையில் ஒரு நாள்’...
 2013ன் ஹாட்ரிக்காக  மலர்ந்துள்ளது.
வியாபார ரீதியாகவும் இப்படம் வெற்றி பெறும்.
பேனையே பெருமாளாக்கும் வல்லமை படைத்த சன் நிறுவனத்தார் கையில் பெருமாளே கிடைத்திருக்கிறார்.


காலத்தை முன் பின்னாகக்காட்டி காட்சிப்படுத்தும் திரைக்கதை பாணியில் பயணிக்கிறது இப்படம்.
கறை படிந்த கதாநாயகன் தனது ‘மாரல் ரிடம்ப்ஷனுக்காக’ மேற்கொள்ளும் லட்சியப்பயணம், அதற்கான தடைகள் என தெளிவான நேர் கோட்டில் அமைந்திருக்கிறது இத்திரைக்கதை.

மூலம் மலையாளம் என்ற சிறப்பிருந்தாலும் தமிழில் சிதைக்கப்படாமல் மெருகூட்டப்பட்டு வந்திருப்பதை பாராட்டியே ஆக வெண்டும்.

மூளைச்சாவு அடைந்த தன் மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கும் பெற்றோர்தான் என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரங்கள்.
இந்தப்படம் நிச்சயம் குறிப்பிடத்தக்க அதிர்வுகளை நம்மிடையே ஏற்படுத்தும்.


தனது காதலனின் இறுதிப்பயணத்தை, அவனது லட்சியத்தை பூர்த்தி செய்யும் விதமாக வடிவமைக்கும் காதலியின் கதாபாத்திரம் மிக உயர்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

காதலனை இழந்த காதலியும், அவனது பெற்றோர்களும் இணையும் காட்சி
 ‘விஷுவல் கவிதையாக’ மலர்ந்திருக்கிறது.



இதயத்தை தானமாக வழங்கும் பெற்றோருக்கும்...
இதயத்தை தானமாக பெற இருக்கும்  பெற்றோருக்கும்...உள்ள முரணை
காவியப்படுத்தி உள்ளார் இயக்குனர் ஷாகித் காதர்.

இயக்குனரோடு அனைத்து தொழில் நுட்பக்கலைஞர்களும் கை கோர்த்து இத்திரைப்படத்தை மேம்படுத்தி தந்து உள்ளார்கள்.
அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றியை பரிசளிப்போம்.

மாமேதை திரு.சுஜாதா அவர்கள் ‘உள்ளம் துறந்தவன்’ என்ற நாவலில்
இதயமாற்று சிகிச்சையை களமாக அமைத்திருப்பார்.
அந்நாவலில் அழகேசன் என்ற ஏழைக்கதாநாயகனின் இதயம்,
கோடீஸ்வர அம்பானி ஒருவருக்கு பொருத்தப்பட்டிருக்கும்.

மகனின் இதயத்தை தானமாக கொடுத்த தாய்,
அழகேசனின் காதலியிடம் கூறுவாள்...
 “ புள்ள, நீயும் வா.
காது கொடுத்து கேளு.
எப்படி படக்குபடக்குனு அடிக்குது பாரு.
அழகேசன் உயிரோடுதான் இருக்கான்”

 ‘அழகேசனின் தாயைப்போல் மனவலிமை படைத்த ஏழைகள் பலர் நம்மிடையே உள்ளார்கள்’ - சுஜாதா.

சுஜாதாவின் ‘உள்ளம் துறந்தவன்’ நாவலும்...
சென்னையில் ஒரு நாள் திரைப்படமும் மனித நேயத்தின் மகத்தான பண்புகளை நம்மிடையே விதைக்கின்றன.

இன்னும் நாக்கை தொங்கப்போட்டு வெள்ளைக்காரனை நக்கிக்கொண்டிருக்கும் சில இளைஞர்கள் மத்தியில்,
‘சென்னையில் ஒரு நாளில்’ வாழ்ந்து காட்டி இருக்கும் நம்பிக்கையூட்டும் இளைஞர்களை பற்றி அடுத்தப்பதிவில் சந்திப்போம்.