Feb 25, 2014

ஸ்டேட் பேங்க் அயோக்கியத்தனம் = State Bank's Cheating

ஏழைகளுக்கு, ஸ்டேட் பேங்க் போன்ற முழுமையான அரசு வங்கிகளே வரம்.
தனியார் வங்கிகள்...சாபம்.
அவைகள்,  ‘வசதி செய்கிறேன்’ என கோவணத்தை உருவும் ‘கோடாங்கிகள்’.


நேற்று  ‘ஸ்டேட் பேங்க்’ என்னை சிதறடித்தது.
நண்பனுக்கு அத்தியாவசிய தேவைக்காக 5000 ரூபாய் அனுப்ப முடியவில்லை.
புதுசு...புதுசா சட்டமும் திட்டமும் போட்டு வச்சுருக்கானுங்க!
அயோக்கியப்பயலுங்க!!


வட இந்திய தொழிலாளர்கள், தங்கள் சம்பளத்தை அனுப்ப ஸ்டேட் பேங்கைத்தான் நம்பி இருக்கிறார்கள்.
நாள் தோறும் படையெடுக்கிறார்கள்.
அந்த நெருக்கடியை, கொசுக்கடியாக எண்ணி திட்டம் போட்டு விட்டான் ஒரு உருப்படாத உலக்கை.
ஏசி ரூமில் உலகத்தை காணும் உருப்படாத பயல்களுக்கு,
மண் குடிசையின் நிலவரம் தெரியுமா!
கரெக்டாக கலவரம் மட்டும், ஏற்படுத்துவார்கள் இந்த கயவாளிகள்.
குடிசைக்கு, குண்டு வைப்பதில் ‘டாக்டரேட்’ செய்தவன்  ‘செட்டிநாட்டு செல்லாக்காசு’.


கோடி..கோடியா பணம் நாடு விட்டு நாடு போகுது.
அதுக்கு  ‘வெளக்கு பிடிக்குது’ ரிசர்வ் வங்கி.
ஏழை பாழை அனுப்பும் 500, 1000த்துக்கு சட்டம் போடுது...திட்டம் போடுது ரிசர்வ் வங்கி மங்குணிகள்.
மண்ணு மோகனும், செட்டிநாட்டு அரசனும் ஆட்சி செய்யும் போதுதான் ஏழைகளை ஏய்ச்சு பிழைக்கும் தொழிலை வளமாக செய்யும் வங்கிகள்.


ஏழையின் நலம் அறிந்த நல்லவர்கள் ஆட்சி செய்தால் இந்த நெருக்கடிக்கு அழகாக தீர்வு காண்பார்கள்.
ஒவ்வொரு ஏடிஎம்மிலும் பணம் போட, பணம் எடுக்க வகை செய்யும் மிஷினை வாங்கி வைப்பார்கள்.
பணம் வாங்கற மிஷினை தனியார் வங்கி [ ஐசிஐசிஐ] வச்சிருக்கான்.
அட்லீஸ்ட், அதையாவது உடனடியா வாங்கி வைங்களேண்டா... அப்ரண்டிசுகளா!


பத்தாயிரத்துக்கு கீழே பணம் அனுப்பப்போனால் தனியாரிடம் திருப்பி விடுகிறது ‘ஸ்டேட் பேங்க்’.
அவன் ஸ்டேட் பேங்கு பக்கத்திலேயே பொட்டிகடை மாதிரி தொறந்து வச்சுகிட்டு உக்கார்ந்து இருக்கான்.
5000 ரூபாய் அனுப்புறதுக்கு, சுளையா 100 ரூபாய் தண்டம் அழணுமாம்.
நூறு ரூபாய் ஒரு ஏழைக்கு மிகப்பெரிய தொகை.
அரசு வங்கியான ஸ்டேட் பேங்க், இவ்வளவு நாள் 25 ரூபாய் வாங்கிட்டு அனுப்பிகிட்டு...நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு!
அதை நீக்கிட்டு, தனியாரை விட்டு கொள்ளையடிக்க வச்ச,  ‘கொள்ளையில போவான்’ யாரு!

சரி...தனியார்கிட்ட அனுப்புறியே...
அந்த தனியார், பணத்தை ஆட்டையை போட்டுட்டா...
எங்க பணத்துக்கு யார் பொறுப்பு?

உதாரணமா...கார்த்தி சீதாம்பரம்னு ஒரு தனியார்,
பணம் வாங்கி அனுப்பற வேலையை செய்யுறான்.
5000 ரூபாய் அனுப்புறதுக்கு, நூறு ரூபாய் சர்வீஸ் சார்ஜ் சேர்த்து வாங்கிட்டு, ஹோட்டல் மாதிரி ‘கம்ப்யூட்டர் பில்’ கொடுக்குறான்.
ஒரு நாள் பூரா, பல லட்சம் வசூல் பண்ணிட்டு,
மொத்த கலெக்‌ஷனையும் ஆட்டையை போட்டு,
கம்பி நீட்டிட்டான்னா...
ஏழைகளின் பணத்துக்கு யார் பொறுப்பு?

ஆன்லைன்லே அனுப்புறோம்னு சில பேர் இறுமாப்ல இருக்காங்க!
ஆன்லைன்ல அனுப்புனா, இலவசம்னு இண்ணைக்கு சொல்றான்.
நாளைக்கு, அதுக்கும் கட்டணம் போடுவான்.

இந்த சிதம்பரம்,  ‘சர்வீஸ் டேக்ஸ்’ என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி  மண்டையில் மயிறு இருக்கறவன்...இல்லாதவன்னு...
எல்லோரையும் கட்ட வச்ச ஆளு.
ஏழைகளை எப்படி சுரண்டலாம்? என்பதை ஒரு நாளைக்கு நூறு முறை சிந்திக்கும் சிந்தனை சிற்பி சிதம்பரம்.
காரணம், வட்டி வாங்கி...வயிறு வளர்த்த பரம்பரை அவர்.

முன்னாடி, இது மாதிரி...ஏழைகள் வயித்திலடிக்கும் நடைமுறைக்கு, நடைபாதையில் நின்று போராடுவார்கள் கம்யூனிஸ்ட் கட்சி கடமை வீரர்கள்.
சிவப்பு கொடியை பிடிச்சுகிட்டு உசுரை கொடுத்து பத்து பேரு கத்துவாங்க!.
அந்த பாதையில் போற பத்தாயிரம் பேர் அதை பார்த்துருவாங்க!!.
பத்தாயிரம் பேர்கிட்ட இருந்து பல கோடி பேருக்கு செய்தி போய் சேர்ந்துரும்.

நம்ம நேரம்...அத்தகைய போராளிகள் போய் சேர்ந்து விட்டார்கள்.
நமக்கு வாய்ச்சது தா.பாண்டியன் வகையறாக்கள்.
அந்த தொகையறாகள், போயஸ் ரோடு தாரை நக்கி...
தாடை பெயர்ந்து கிடக்குதுகள்.

வாடி நிற்போர், வாட்டம் போக என்ன வழி?
ஏய்ச்சு பிழைப்பவனை, ஏறி மிதிக்க வந்து விட்டது தேர்தல்.
சீனாதானா போன்ற அம்பானி அடிவருடிகளை அறவே அழிப்போம்.
ஒழிப்போம்.
தெரு விளக்கில் படித்தவனை, நிதி மந்திரியாக்குவோம்.
ஏழைக்காக ஏணி ஏந்துபவனை, ஏற்றம் பெறச்செய்வோம்.
அது வரை வாடுவோம்...வதங்குவோம்...
அயோக்கியர்களை அழிக்க, அறம் பாடுவோம்.

Feb 23, 2014

ஆஸ்காரை அள்ளப்போகும் படம் !


ஓய்விலிருப்பவர்கள்...
எண்பது வயது தாண்டியவர்கள்...
‘பேசுவதை’, கேட்பதற்கே நாதி இருக்காது.
இதில் ‘விருப்பத்தை’ யார் நிறைவேற்றுவார்கள் ?

இப்படி ஒரு கேள்வி, ‘பாப் நெல்சனுக்குள்’ [ Bob Nelson ] எழும்பியதால்...
அற்புதமான திரைக்கதை உருவாகிறது.
உருவான திரைக்கதை,
‘அலெக்ஸாண்டர் பைன்’ [ Alexander Payne ] இயக்கத்தில்...
‘நெப்ராஸ்கா’ என்ற காவியமாக வெள்ளித்திரையில் வடிவமைக்கப்படுகிறது.


 ‘ப்ரூஸ் டேர்ன்’ [ Bruce Dern ] என்ற நடிகரின் ஆற்றலால்,
ஒரு முதியவரது வாழ்க்கை உயிரோட்டமாக பதிவாகிறது.


Nebraska | USA | 2013 | 110 min | Directed by : Alexander Payne

நூறு மைல் வேகத்தில்...
வாகனங்களின் விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
சாலையின் ஓரம்...
தள்ளாத வயதில்...தளர் நடையில்...ஒரு முதியவர்.
 ‘ரோந்தடிக்கும்’ காவல்துறை அதிகாரி பார்வையில், முதியவர் படுகிறார். விசாரிக்கிறார்.

 “ எங்கே போறீங்க? ” 

 “                                       ”

 “ எங்கேயிருந்து வர்றீங்க ? ”

 “                                                 ”
காவல்துறை அதிகாரியின் கேள்வியாலும், உடல் மொழியாலும்... மனிதநேயம் வெளிப்படுகிறது.
முதியவர், காவல்துறை அதிகாரியின் கேள்விகளுக்கு,
கண்ணசைவாலும், உடல் மொழியாலும் ‘பதிலை’ சொல்கிறார்.

“ இந்தா...அங்க போய்ட்டு இருக்கேன் ”

“ இந்தா...அங்க இருந்து வர்றேன் ”

முதியவரின் உடல் மொழியிலேயே,
யாரையும் லட்சியம் செய்யாத...அலட்சியம் வெளிப்படுகிறது.

கட்.

முதல் காட்சி முடிவடைகிறது.
அற்புதமான பின்னணி இசையில், ‘டைட்டில்கள்’ தொடர்கிறது.

ஒரு இளைஞன் வருகிறான்.
காவல்நிலையத்தில் அமர்ந்திருக்கும் முதியவரை நோக்குகிறான்.
விசாரிக்கிறான்.
வீட்டுக்கு அழைக்கிறான்.
மறுக்கிறார்.

“ ஏன் ? ”

“ ஒரு மில்லியன் டாலர் எனக்கு பரிசு விழுந்திருக்கு. 
அதை வாங்கப்போணும்”

சட்டைப்பையிலிருந்து பரிசு கூப்பனை எடுத்து நீட்டுகிறார்.
பையன் பார்க்கிறான்.

“இது ஏதோ, டுபாக்குர் கம்பெனியின் டுபாக்கூர் பரிசு”

தந்தை பிடிவாதமாக மறுக்கிறார்.
சமாதானம் செய்து அழைத்துச்செல்கிறான்.

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுகிறது.
 ‘சற்றும் மனம் தளராத விக்கிரமன்’ வேதாளத்தை அழைத்துக்கொண்டு
பரிசை வாங்க புறப்படுகிறான்.
இந்தப்பயணமே அற்புதமான ‘ரோடு மூவி’யாகிறது.


இப்படம்,
‘பாலகன்’ முதல்  ‘பழுத்தப்பழம்’வரை,
பாடம் பகிர்கிறது.
எளிமையாக எடுத்துரைக்கிறது.
பொறுமையாக போதிக்கிறது.

இக்கருப்பு - வெள்ளை காவியத்தை கட்டாயம் பாருங்கள்.
உற்றார்- உறவினரையும் பார்க்க வையுங்கள்.
அதுதான் முக்கியம்.


கருப்பு - வெள்ளை காவியங்கள் மேல் எனக்கிருக்கும் காதலை இக்காவியம் இன்னும் அகலப்படுத்தி இருக்கிறது.
இக்காவியம், கருப்பு- வெள்ளையில் படமாக்கப்பட்டதை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போமா !

The film was shot in black and white because Payne said he wanted to produce an "iconic, archetypal look".
 According to cinematographer Phedon Papamichael, the choice was to use "the poetic power of the black and white in combination with these landscapes and of course the landscapes are playing a huge role in this story".
The choice of black and white was made against distributor Paramount Vantage's wishes. 
The film was shot with Arri Alexa digital cameras and Panavision C-Series anamorphic lenses.

ஆறு ஆஸ்கார் விருதுகளை அள்ள காத்திருக்கிறது இக்காவியம்.

அடைய வாழ்த்துவோம்.



  

Feb 22, 2014

ஆஹா கல்யாணம் = ஜில் பியர் & ஒயின் .


ஐஸ் பாக்சில் தவமிருக்கும்,  ‘ரிவெய்ரா ஒய்ட் ஒயின்’...
பீரிஸரிலிருந்து புறப்பட்டு வந்த,  ‘ஹைனிகெய்ன் பியர்’...
இரண்டும் கலந்த கிளாஸ், கையில்...

கரகர...மொறுமொறு...நெய்யில் வறுக்கப்பட்ட முந்திரி...
குச்சியில் சொருகிய ‘சீஸ் பைனாப்பிள்’...
இரண்டும் மாறி மாறி, வாயில்...

பனி விழும் மலர் வனம், ஆங்காங்கே...
பார்வைக்கு வரம் தரும் தேவதைகள், எங்கெங்கும்...

‘போஸ் ஸ்பீக்கரில்’...
‘உல்லாசம் ஆகவே...
உலகத்தில் வாழவே’
என  ‘சந்திரபாபு’ துடிக்க...

ஐம்பது வயது...
இடுப்பில் எம்.ஆர்.எப் டயர் இருந்தாலும்...
சிந்தனையில், பிரபுதேவாவாகி...
இடுப்பை அசைத்தாடும், பீலிங் வரும்.
‘ஆஹா கல்யாணமும்’ இத்தகைய அனுபவத்தை தருகிறது.

உள்ளூர்க்கார கதிர்வேலன், பிரம்மன் எனும் ‘பிக்பாக்கெட்டுகள்’,
நம்பி வந்த ரசிகனை பிளேடால் கீறுகிறார்கள்.
வடக்கத்தி யஷ்ராஜ் சோப்ரா, வணிக சினிமாவுக்குரிய இலக்கணத்தை,   அணுஅணுவாக இழைத்து, திரைக்கதையை நெய்திருக்கிறார்கள்.

கதாநாயகனின்  ‘தெலுங்குத்தமிழையும்’...
கதாநாயகியின்   ‘சின்மயத்தமிழையும்’....
ரசிக்க வைத்தது ‘திரைக்கதையே’.


கதாநாயகி ‘வாணி கபூரை’ பத்தி நாலு வார்த்தை சொல்லவில்லையென்றால், ‘கட்டை வேகாது’.
 “ தேக்கு பாதி...கேக்கு பாதி...கலந்து செய்த கலவை நான்” என வந்திருக்கும் வாணி கபூரை வாழ்த்தி வரவேற்போம்.


தொப்புளை சுத்தி நான்கு திசைகளிலும்,
‘முழம் ஏரியாவை’ காலியா காமிச்ச காஸ்ட்யூமரை ஸ்பெஷலா பாராட்டியே தீரணும்..
காஸ்ட்யூமர் வடிவமைத்த ‘கவர்ச்சி மைதானத்தில்’ எழும் காந்தப்புயல்,
ஆறிலிருந்து அறுபது வரை அனைவரையும் அலைக்களிக்கும்.
‘இந்த ஏரியாவை காட்டி’ அதகளம் செய்து கொண்டிருந்த ‘ஸ்ரேயா’, பாட்டியாகி விட்டதால்...
‘வாணி கபூரை’ பார்ட்டி கொடுத்து வரவேற்கும் தமிழகம்.


'லிப்லாக்’ ,   ‘திருமணத்துக்கு முந்தைய உடல் உறவு’ என அழகிய அத்துமீறல்கள்...
 ‘திரைக்கதை பாயாசத்தில்’  ‘இந்திரன் தோட்டத்து முந்திரியாய்’ இணைந்திருந்து ருசிக்கிறது.
[ சிறுவர்களை தவிர்த்து,இப்படத்தை பார்க்கச்செல்லவும்.]

தொழில் பக்தியும்,செய்நேர்த்தியும் இருப்பதால்,
 ‘வடக்கத்தி உணவை’ உண்டு வாழ்த்துவோம்.

Feb 11, 2014

இஷ்டத்துக்காக ‘படிப்பவள்’...கஷ்டத்துக்காக ‘படுப்பவள்’.


நண்பர்களே...
இரான் நாட்டில் படைப்பாளிகளுக்கு வரும் நெருக்கடி,
கொசுக்கடி அல்ல...‘குட்நைட்’ போட்டு தூங்குவதற்கு.
நேர்மையான படைப்பாளிகளுக்கு நேரிடும் நெருக்கடிகள்,
 ‘நல்ல படங்களாக’ மாறி நன்மை பயக்கின்றன.


கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அப்பாஸ் கியரஸ்தமியின் படங்கள் இரானில் திரையிடப்படுவதில்லை.
இருந்தாலும் இடம் பெயரவில்லை.
காரணத்தை அவரே கூறுகிறார்...

"When you take a tree that is rooted in the ground, and transfer it from one place to another, the tree will no longer bear fruit. 
And if it does, the fruit will not be as good as it was in its original place. 
This is a rule of nature. 
I think if I had left my country, I would be the same as the tree." —Abbas Kiarostami.

வெறுமையான பாடல் காட்சிகளுக்காக,
வெளிநாடு போகும் கோமாளிகள்தான்...
நமக்கு கிடைத்த சாபம்.
நாடு விட்டு நாடு தாவினாலும்,
நல்ல படமெடுக்கும் படைப்பாளி...
இரானுக்கு கிடைத்த வரம்.

பிரான்சுக்கு பறக்கிறார்.
‘சர்டிபைட் காப்பி’ [ Certified Copy ] என பிரமாதமா ஒரு படம் கொடுக்கிறார்.
ஜப்பானுக்கு  ஜம்ப் பண்ணுகிறார்.
'லைக் சம்ஒன் இன் லவ்’ என ஜம்முன்னு ஒரு படம் கொடுக்கிறார்.

Like someone in Love | 2012 | Japanese | Directed by : Abbas Kiarostami.


அப்பாஸ் கியரஸ்தமியின் படங்களில்,
முதல் ஷாட்டே அசாதாரணமாக இருக்கும்.
இப்படத்தில், கேமராவை கதாநாயகியாக்கி...
முதல் ஷாட்டை அமைத்துள்ளார்.
அசத்தலான கோணத்தில், காட்சியின் களத்தை ஒரே ஷாட்டில் விவரிக்கிறார்.

பரபரப்பான இரவு விடுதி.
பலான பெண்கள்.
பலானதை மேய வந்த  ‘பண பலன்கள்’.
கதாநாயகி தனிமையில் செல்போன் பேசிக்கொண்டு இருக்கிறாள்.
எதிர்முனையில் பேசுபவன் காதலன் என அவளது உரையாடலே தெளிவாக்குகிறது.
அதோடு, அவன் ஒரு சந்தேகப்பேர்வழி என்பதையும் சித்தரிக்கிறது.

‘பக்கத்து டேபிள்’ செல்போனை நோண்டுவதை நிறுத்தி,
கதாநாயகியின் பேச்சை உற்றுக்கவனித்து,
‘நான் வேண்டுமானால் பேசி சந்தேகத்தை தீர்த்து வைக்கவா’ என்பது போல் சைகை செய்கிறது.
‘பக்கத்து டேபிளின்’ உடல் மொழியே,
‘தோழி’ என படம் வரைந்து பாகம் குறிக்கிறது.

இவ்வாறு, ஒவ்வொரு ஷாட்டிலும்...
பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கி காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர்.


மற்றொரு உச்சபட்ச சுவாரஸ்ய களத்தை மட்டும் சொல்கிறேன்.
வெளிச்சத்தில் ‘கல்லூரி மாணவி’யாகவும்,
இருட்டில் ‘இரவு ராணி’யாகவும் பணியாற்றும் கதாநாயகி.
‘மாணவியை’ காதலிக்கும் காதலன்.
‘இரவு ராணியை’  ‘புக் செய்த’ 80 வயது பேராசிரியர்.
மூவரையும் ஒரே காரில் ஏற்றி விடுகிறார் இயக்குனர்.


இக்காட்சியில் இருக்கும் சுவாரஸ்ய திருப்பங்களை,
படத்தை பார்த்து அனுபவியுங்கள்.
இறுதிக்காட்சியில் வரும் ‘அப்ரப்ட் எண்டிங்கில்’ [ Abrupt Ending ] திடுக்கிடுங்கள்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.


Feb 5, 2014

அடையாளம் தருபவனே...அடையாளம் பெறுவான்.


About Elly | 2009 | Iran | 119 min | Directed by : Asghar Farhadi.

இயக்குனர் அஸ்கர் பர்ஹாதியின் நான்காவது படம் இது.
ஹிட்ச்ஹாக் பாணியில் ஒரு சோசியல் திரில்லரை கொடுத்து இருக்கிறார்.


நான்கு ஜோடிகள் ஜாலியாக டூர் வருகிறார்கள்.
வழக்கமாக தங்கும் ரிஸார்டில் இடம் இல்லாததால் ஒரு ‘டஞ்சன் வில்லாவில்’ வேறு வழியில்லாமல் தங்குகிறார்கள்.
மூன்று ஜோடிகள் மட்டுமே கணவன் - மனைவி குழந்தைகளோடு வந்தவர்கள்.
ஒரு ஜோடி திருமணம் ஆகாதவர்கள்.
ஆனால் அவர்களை, திருமணம் ஆனவர்கள் என்றும், தேனிலவுக்காக வந்தவர்கள் என்றும் பொய் சொல்லி ரிஸார்டில் தங்க வைக்கிறார்கள் ஏனைய ஜோடிகள்.
காரணம் இரான் சட்டப்படி தம்பதிகள் மட்டுமே ஒன்றாக தங்க முடியும்.

திருமணமாகாத ஜோடிதான் அஹ்மத்- எல்லி.
வில்லாவை ஒட்டிய கடற்கரையில் குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
காவலுக்கு எல்லி.
குழந்தைகள் விளையாடிய பட்டத்தை துரத்திக்கொண்டு எல்லி ஓடுகிறாள்.
எல்லி குழந்தையாக மாறி பட்டத்தை கண்டு களிக்கும் ஷாட்டுகளாக டைரக்டர் அடுக்குகிறார்.
கட்.




ஒரு சிறுமி ஓடி வந்து, மற்றொரு சிறுவன் கடலோடு போய் விட்டான் என அழுகிறாள்.
அனைவரும் தேடி சிறுவனை காப்பாற்றி விடுகிறார்கள்.
அப்போதுதான் கண்டுபிடிக்கிறார்கள்.
‘எல்லியை காணவில்லை’.
கடலில் மூழ்கினாளா?
சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டாளா?

இரண்டு கேள்விகளையும் எழுப்பி கதாபாத்திரங்கள் தேடுவதாக திரைக்கதை அமைத்து,
விளையாடி இருக்கிறார் அக்ஸர் பர்ஹாதி.
‘எல்லி’ சந்தோஷமாக இருக்கும் ஷாட்களை அடுக்கி காண்பித்ததன் மூலமாக,
பார்வையாளர்களையும் தேட வைத்து விடுகிறார் பர்ஹாதி.

கதையை அக்ஸர் பர்ஹாதி மட்டுமே எழுதவில்லை.
இன்னொரு நண்பரும் பணியாற்றி இருக்கிறார்.
இருந்தும், இயக்குனர் அக்ஸர் பர்ஹாதிக்கு பேஸ்புக்கில்,
ஸ்டேட்டஸ் போடும் நெருக்கடி வரவில்லை.

காரணம், கதை அமைக்க உதவிய நண்பர் 'Azad Jafarian' பெயரை நன்றியுடன் டைட்டிலில் பெயர் போட்டு அடையாளம் காட்டி விட்டார்.
ஏனென்றால் அக்ஸர் பர்ஹாதி,
தற்காலிக வெற்றியில் மினுங்கும் கவரிங் நகையல்ல...சொக்கத்தங்கம்.

தன்னோடு பணியாற்றியவரை அடையாளம் காட்டியதால்தான்,
ஆஸ்கார் அவரை வந்தடைந்து உலகுக்கே அவரை அடையாளம் காட்டி இருக்கிறது.